இதுதான் இடம்.. இதுதான் நேரம்.. ஒத்தைக்கு ஒத்தை பேசலாம்.. கிரண்பேடிக்கு நாராயணசாமி சவால்
புதுவை காந்தி மைதானத்தில் தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தயாரா என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி: புதுவை காந்தி மைதானத்தில் தன்னுடன் நேருக்கு நேர் விவாதம் செய்ய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தயாரா என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயண சாமியின் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. மாநில ஆளுநர் ஒருவருக்கு எதிராக மாநில முதல்வர் போராடி வருவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு மாநில துணை நிலை ஆளுநர் எதிராக இருப்பதாகவும், அரசு மக்களுக்கு நலத்திட்டங்கள் செய்வதை கிரண் பேடி தடுக்கிறார் என்றும் கூறி நாராயணசாமி போராடி வருகிறார். சாலை ஓரத்தில் சாப்பிட்டு, அலுவலக பணிகளை செய்து அவர் இப்படி போராடுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு தற்போது டெல்லி சென்றுவிட்டார். இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி இதுகுறித்து பேட்டி அளித்துள்ளார்.
என்ன பேட்டி
அதில், அரசு பணத்தில் மாநில அரசுக்கு சம்பந்தமில்லாத நிகழ்ச்சிகளுக்கு பணத்தை விரையம் செய்கிறார் கிரண் பேடி. தேவையில்லாமல் விமானத்தில் கிரண்பேடி பயணம் செய்து பண விரயம் செய்கிறார்.இன்று கிரண்பேடியை கண்டித்து அனைத்து கட்சி அலுவலகங்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வீடுகளில் கருப்புகொடி ஏற்றப்பட இருக்கிறது..
என்ன சவால்
எங்களுடன் விவாதம் நடத்த தயாரா என்று கிரண் பேடி சவால்விட்டு இருந்தார். ஆம் நாங்கள் தயார். கிரண்பேடியுடன் நேருக்கு நேர் மோத நாங்கள் தயார். கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை முன் பொதுமக்கள் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் விவாதிக்க தயார்.
என்ன காரணம்
நாங்கள் இதுவரை கேட்ட 39 கோரிக்கைகளை துணை நிலை ஆளுநர் தடுத்தது ஏன் என்று விளக்கம் வேண்டும் என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக நாராயணசாமியை, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி விவாதத்திற்கு அழைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு தெரிவித்தார்
இந்த நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமியின் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார். அதேபோல் நாராயணசாமியின் தர்ணா போராட்டம் வெற்றி பெற கர்நாடக முதல்வர் குமாரசாமி நாரயணசாமிக்கு போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘இதயங்களை இணைப்போம், இந்தியாவை மீட்போம்'என்பது மாநாட்டின் முழக்கம் மட்டுமல்ல, இந்தியாவின் முழக்கம்; நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைத்து, தனது அரசியல் லாபங்களை அடைய நினைக்கும் பாசிச பா.ஜ.க, அதற்கு துணைபோகும் அ.தி.மு.க அரசுகளை வேரறுப்போம், என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்