ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்
புதுச்சேரி: ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என, அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என நாராயணசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சுமார் 6,000 சதுர கிலோ மீட்டருக்கு பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் வரும் 25-ம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முன் நடைப்பெற உள்ள தமிழக, புதுச்சேரி மாநில விவசாயிகள் இணைந்து நடத்த உள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, ஆதரவளித்து துவக்கி வைக்க புதுவை முதல்வரை, தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், புதுச்சேரி மாநில தலைவர் காரை பி இராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து வலியுறுத்தினர்.
அப்போது அவர் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம். அதனை கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை என கூறியுள்ளார்.
மேலும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்தித்து வலியுறுத்தி உள்ளதாகவும், விரைவில் சட்ட மன்றத்தில் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டம் தேதி முடிவு செய்த பிறகு உண்ணாவிரத்தில் பங்கேற்பது குறித்து ஒரிரு நாட்களில் தெரிவிப்பதாக தெரிவித்தார்.
மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர், நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், திருவாரூர் மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார், மாநில துணை செயலாளர் எம்.செந்தில்குமார் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்தனர்.