இவரு பார்ப்பது செக்யூரிட்டி வேலை.. பண்ணுன வேலையை பார்த்தீங்கன்னா.. தர்மஅடி கொடுத்த மக்கள்
புதுச்சேரி : வேலைக்கு செல்லாமல் விடுமுறை எடுத்து புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் முகாமிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட கொல்கத்தா இளைஞரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 9 பவுன் நகை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி குருசுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். வெல்டிங் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி விஜயகுமாரி (51). இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து பின்தொடர்ந்து வந்தார். அவர் விஜயகுமாரி அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை அறுத்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த விஜயகுமாரி சத்தம் போட்டவுடன், அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து, தர்ம அடி கொடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜான்சன் என்பது தெரியவந்தது. இவர் சென்னையில் உள்ள ஒரு செக்யூரிட்டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. ஜான்சன் அடிக்கடி விடுமுறை எடுத்து சென்னையிலும், புதுச்சேரியிலும் முகாமிட்டு தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. அந்த வகையில் ஜான்சனிடம் சென்னையில் வழிப்பறி செய்து வைத்திருந்த 7 பவுன் தங்கநகை மற்றும் விஜயகுமாரியிடம் அறுத்த 2 பவுன் நகை என மொத்தம் 9 பவுன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து ஜான்சன் மீது வழக்குபதிவு செய்த போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது சிதம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் வழக்குகள் திருட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.