தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. கவிழ்ந்த புதுச்சேரி அரசு.. பாஜகவுக்கு என்ன லாபம்? ஒன்றல்ல "6" இருக்கு
புதுச்சேரி: புதுச்சேரியில் தேர்தல் தேதி அறிவிக்க இன்னும் 10 நாட்கள்தான் இருக்கும் நிலையில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இல்லாமல் கவிழ்ந்துள்ளது. அடுத்தடுத்து தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததன் பின்னணியில் பாஜக இருப்பதாக நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடையாது.. கட்சிக்கு அடிப்படை பலமும் கிடையாது.. அப்படி இருக்கும்போது நாராயணசாமி அரசு கவிழ்வதால் பாஜகவுக்கு என்ன லாபம்?
இந்த கேள்விகள் சாமானியர்கள் முதல் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு முக்கியமான காரணம் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாப் 6 காரணங்கள் உங்களுக்காக இதோ வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:
காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி
2014ம் ஆண்டு முதல், நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் தலைமையிலான பாஜக முன்வைக்கக்கூடிய முக்கியமான ஒரு கோஷம் "காங்கிரஸ் இல்லாத இந்தியா" என்பதுதான். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பதவி இழந்ததால், கடந்த 40 வருடங்களில் முதல் முறையாக, தென்னிந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இல்லை என்ற நிலை இப்போது உருவாகியுள்ளது. கடந்த வருடம் புதுச்சேரி வருகை தந்த நரேந்திரமோடி காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி உருவாக்கப்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஒரு வருடத்துக்குள் அது நடந்துள்ளது. நாளை மோடி மறுபடியும் புதுச்சேரி வருகிறார் என்பதை இதோடு பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.
காங்கிரஸ் தலைமை
காங்கிரஸ் தலைமையின் இயலாமையை மேலும் மேலும் வெளிச்சம் போட்டு காட்டி மக்கள் மத்தியில் இருந்து காங்கிரஸ் செல்வாக்கை ஒரேடியாக அடித்து நொறுக்குவது பாஜகவின் முக்கிய திட்டம். மத்திய பிரதேசம், கோவா, மணிப்பூர் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அரசுகள் கவிழ்ந்தபோது, பாஜக மீது மக்களுக்கு வந்த கோபத்தை விட காங்கிரஸ் தலைமை வலிமை இல்லாமல் இருக்கிறது என்று குற்றம் சாட்டியவர்கள் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். புதுச்சேரியிலும் அதேபோன்ற வியூகத்தை முன்னெடுக்கிறது பாஜக.
காங்கிரசுக்கு இழப்பு
புதுச்சேரியில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் எந்த மாதிரி ரிசல்ட் வந்தாலும் பாஜகவுக்கு அதனால் நஷ்டம் கிடையாது. ஆனால் காங்கிரசுக்கு இழப்பு. ஏனென்றால் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்த 5 எம்எல்ஏக்களின் மூன்று பேர் ஏற்கனவே பாஜகவில் சேர்ந்து விட்டனர். மற்றவர்களும் விரைவில் சேர்வார்கள் அல்லது சுயேச்சையாக போட்டியிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இது, காங்கிரஸ் பலத்தை புதுச்சேரியில் மேலும் குறைத்து விடும். நீண்ட காலமாக நாராயணசுவாமி அரசுக்கு குடைச்சல் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரது அரசு கவிழ்க்கப்பட்டதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது.
நமச்சிவாயம் செல்வாக்கு
காங்கிரசிலிருந்து விலகிய எம்எல்ஏக்கள் தங்களுக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர். குறிப்பாக பொதுப்பணித்துறை என்ற முக்கிய பொறுப்பில் அமைச்சராக இருந்தவர் நமச்சிவாயம். அவர் தனது வில்லியனூர் தொகுதியில் மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார். இது போன்ற முக்கியமான தருணங்களில் அரசியல் மோதல் நடைபெற்று மீண்டும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள போகும்போது அவர்களுக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். மீண்டும் அவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பது பாஜகவின் நம்பிக்கையாக இருக்கிறது.
தமிழிசை வந்தது ஏன்?
கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தபோது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் சுமூக உறவு கிடையாது. அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன. நாராயணசாமி கொண்டு வந்த பல திட்டங்களை அவர் முடக்கிப் போட்டார். துணைநிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரம் இதற்கு ஒரு முக்கியமான காரணம். கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருக்கும்போது நாராயணசாமி அரசு கவிழ்ந்தால் மக்களின் கோபம் பாஜக பக்கம் சென்றுவிடும். எனவேதான் தமிழிசை சௌந்தரராஜன் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு நாராயணசாமி அரசு கவிழட்டும் என்று காத்திருந்ததாக கூறப்படுகிறது. இப்போது துணைநிலை ஆளுநருக்கும், ஆட்சி கவிழ்ந்ததிற்கும் தொடர்பு இல்லாதது போன்ற ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் தலைமையின் செயலற்ற தன்மைதான் அந்த கட்சி உடைவதற்கு காரணம் என்பது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. இது காங்கிரசுக்கு பின்னடைவு .பாஜகவுக்கு நல்லது.
குடியரசு தலைவர் ஆட்சி
பொதுவாக புதுச்சேரி ஆளுநர் டிஸ்மிஸ் செய்யப்படும்போது அல்லது வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டால் கூடுதல் பொறுப்பை தமிழக ஆளுநர் கையில் எடுப்பார். ஆனால் இந்த முறை தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் அனைத்து தரப்பிலும் நன் மதிப்பை பெற்றவர். கிரண்பேடி போல கடுமையான பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகள் தமிழிசையிடம் இருந்து வராது. அவர் மீது கட்சிகளை தாண்டி நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே பாஜக, தமிழிசை மூலமாக கிரண்பேடி ஏற்படுத்தி இருந்த அதிருப்தி அலைகளை ஒழித்துக் கட்டுகிறது. மற்றொரு பக்கம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதும், தமிழிசை சௌந்தரராஜன் மூலமாக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்த்து, அந்த கட்சிக்கு நல்ல பெயரை சம்பாதிக்க வைக்கலாம் என்று நினைக்கிறது. தேர்தல் நேரத்தில் ஆளும் கட்சியாக காங்கிரஸ் இருந்தால், அந்தக் கட்சிக்கு அட்வான்டேஜ் அதிகம். ஆனால் ஆட்சியில் இல்லாவிட்டால் அது பாஜகவுக்கு அட்வான்டேஜ் என்பது மற்றொரு முக்கியமான காரணம்.