யானை லட்சுமி மரணம்.. மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை எப்போது? முதல்வர் ரங்கசாமி சொன்ன பதில்
புதுச்சேரி: புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழந்த நிலையில், அங்கு புதிய யானை வாங்குவது தொடர்பாகப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அமைந்துள்ள மணக்குள விநாயகர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த கோயிலுக்கு இணையாக இங்கிருந்த யானை லட்சுமியும் ரொம்பவே பிரபலமானது.
ஜல் ஜல் என நான்கு கால்களிலும் கொலுசு அணிந்து கொண்டு ஜம் என்று நடந்து வரும் இந்த யானையின் அழகோ அழகு தான். புதுச்சேரி மக்களின் செல்லப் பிள்ளையாகவே இந்த யானை வலம் வந்தது.
யானை பாகனின் கையை பிடித்த யானை லட்சுமி.. கடைசியாக பெற்ற முத்தம்.. கலங்க வைக்கும் வீடியோ
கோயில் யானை லட்சுமி
புதுச்சேரி கோயிலுக்கு கடந்த 1995ஆம் ஆண்டு பக்தர் ஒருவர் இந்த யானையை வழங்கினார். அப்போது இந்த லட்சுமி யானைக்கு வெறும் 5 வயது தான். அப்போது முதலே இது புதுவை மக்களுக்குச் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தது. பக்தர்களிடம் இது அன்பாகத் தான் இருக்கும். சுமார் 27 வயதான இந்த யானை நேற்று முன்தினம் வழக்கம் போல வாக்கிங் சென்றது. காலையில் யானைப் பாகன் வழக்கம் போல வாக்கிங் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கல்வே காலேஜ் அருகே செல்லும் போது, அந்த யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது.
மரணம்
யானையைக் காக்கப் பாகன் பல்வேறு முயற்சிகளை எடுத்த போதிலும் யானை பரிதாபமாக உயிரிழந்தது. எப்போதும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்து கொண்டு கம்பீரமாக யானை லட்சுமி நிற்கும் இடம் இப்போது மணக்குள விநாயகர் கோயிலில் அது இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது. வழக்கமாகக் கோயிலுக்கு வருபவர்களுக்கு யானை லட்சுமி இருக்கும் இடம் வெறிச்சோடி இருப்பதைக் கண்டு வேதனை அடைகிறார்கள். இதற்கிடையே மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை வாங்குவது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி அரசின் புதுப்பிக்க வல்ல எரிசக்தி முகமை சார்பில் 'கோ எலக்ட்ரிக்' மின்சார வாகன கண்காட்சி கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவினை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.. இதையடுத்து கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் வாகனங்களை அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினருடன் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, "20 தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்ட இந்த மின்சார வாகன கண்காட்சி புதுச்சேரிக்குச் சிறப்பு சேர்த்துள்ளது.
செலவு குறையும்
புதுச்சேரி சுற்றுலாத் துறையில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இந்த இ பைக் வாகன கண்காட்சியை இங்கு நடத்துகின்றோம். இந்த வாகனங்கள் மூலம் பாதுகாப்புத் தன்மை உண்டாகிறது. மின்சாரம் மூலம் இயக்கப்படுவதால் செலவும் குறைகிறது. புதுச்சேரியில் தற்போது மின்சார வாகனங்களின் பயன்பாடு உயர்ந்து வருகிறது. பலரும் மின் வாகனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுமக்கள் மின்சார வாகனங்களை வாங்குவதற்கு வங்கிகளின் மூலம் கடனும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
புதிய யானை எப்போது
அதனால் மக்கள் இந்த மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி புதுச்சேரியை ஒரு புகையில்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது எங்களுடைய அரசின் எண்ணம்" என்றார். தொடர்ந்து புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலுக்கு புதிய யானை வாங்கப்படுமா எனக் கேள்விக்குப் பதில் அளித்த அவர், "புதிய யானை வாங்குவது தொடர்பாகக் கோவில் நிர்வாகம் முடிவு செய்ய வேண்டும்.. அரசு யானை வாங்குவதில்லை" என்றார்.