புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வருமா.. தட்டாஞ்சாவடியை தட்டிச் செல்லப் போவது யார்.. ஒரு விறுவிறு பார்வை
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுடன், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்கட்சிகள் கூறுவதுபோல் இந்த இடைத்தேர்தலால் புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
புதுச்சேரியில் கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைத்தது.
அப்போதே என்.ஆர்.காங்கிரஸ் மத்தியில் ஆளும் பாஜக ஆதரவுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் சிலரை இழுத்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இதற்காக என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஸ்டாலினுடன் இ.கம்யூ வேட்பாளர்கள் சந்திப்பு.. காரணம் இதுதான்
குறுக்கு சால் ஓட்டிய கிரண் பேடி
இச்சூழலில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் பாஜகவினரை கொண்டே நிரப்பியது சர்ச்சையை கிளப்பியது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை கொடுத்தால் ஆட்சியை கலைத்துவிட வாய்ப்பு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை இல்லை என்ற தீர்மானமும் புதுச்சேரி ஆளும் அரசால் கொண்டு வரப்பட்டது.
வாக்குரிமை உண்டு
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரையின்றி நியமனம் செய்து கொள்ளலாம், அவர்களுக்கு சட்டப்பேரவையில் வாக்குரிமை உண்டு என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
பேர அரசியல்
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் வரவுள்ள சூழலில் அணி மாற பேரம் நடத்தியதாக இரு எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் மீது ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் இருவர் சபாநாயகரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பலம் எத்தனை
புதுச்சேரியில் தற்போதுள்ள 33 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரஸ், திமுகவுக்கு 17 பேர் உள்ளனர். எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அதிமுக 4, பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3, சுயேட்சை 1 என்று 15 உள்ளது. தற்போது எதிர்க்கட்சித்தலைவர்கள் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ஆட்சி மாற்றம் என்றே பேசத் தொடங்கியுள்ளனர். அதேபோல் காங்கிரஸ் தலைவர்களும் எதிர்க்கட்சியினர் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இச்சூழலில்தான் புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார். இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதித்து புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த அக்டோபர் 30ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதையடுத்து அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் வைத்திலிங்கம், இத்தொகுதி காலியாக இருப்பதாக கடந்த நவம்பர் 8 ம் தேதி அறிவித்தார். இத்தொகுதியில் ஏப்ரல் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
யாருக்கு பலம்
அத்தொகுதியில் கடந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரசுக்கு அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட சேது செல்வம் இரண்டாம் இடத்தை பிடித்தார். காங்கிரஸ் - திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் படுதோல்வியடைந்தார்.. அப்போது கம்யூனிஸ்ட் தனித்து போட்டியிட்டது. ஆனால் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இத்தொகுதியை கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு வாய்ப்பு தருமாறு கூட்டணி அமைவதற்கு முன்பே பேசி வந்தாலும், தற்போது ஆட்சி மாற்றம் என்ற பேச்சு எழுந்துள்ளதால் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக வேட்பாளரே மீண்டும் இத்தொகுதியில் களம் இறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் போட்டி
அதேபோல் என்.ஆர். காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை தவிர, இத்தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், மக்கள் நீதி மய்யம் கட்யின் வேட்பாளர்களும் தனித்து போட்டியிட உள்ளனர். இதனால் புதுச்சேரி அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றிபெற்றால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்ற எதிர்கட்சிகளின் கணிப்புகள் பலிக்குமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.