ம.பி.யில் இருந்து எல் முருகன் எம்பியாவது ஏன்.. புதுவை முதல்வர் ரங்கசாமி என்ன சொன்னார்.. பின்னணி!
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பிடி கொடுக்காத காரணத்தால் மத்திய பிரதேசத்தில் இருந்து எல் முருகன் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பாஜகவிற்கு எம்பி பதவியை தர வேண்டும் என்று புதுவை பாஜகவினர் தீர்மானம் போட்டு ரங்கசாமியிடம் கொடுத்த போதிலும்,அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதால் மத்திய பிரசேத்தின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக முருகனை அறிவித்துள்ளது பாஜக தலைமை.
Recommended Video
தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் சட்டசபை தேர்தலில் நான்கு இடங்களை பாஜகவை வெற்றி பெற வைத்து 15 வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் தாமரையை மலரவைத்தார். அதேநேரம் தாரபுரத்தில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றார்.
இந்நிலையில் எல் முருகனின் செயலை பாராட்டி, அவரை மத்திய ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராக பிரதமர் மோடி நியமித்தார். இதனால் பாஜக மாநில தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமிக்கப்பட்டார். மத்திய அமைச்சராக்கப்பட்ட முருகன், எம்பியாக 6 மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
அனுமதிக்காத ஜெ.. உச்சத்தில் உதயநிதி.. நேரம் பார்த்து அரசியலுக்கு விஜய் தந்த கிரீன் சிக்னல்? பின்னணி?
தமிழகத்தில் 2 எம்பிக்கள்
தற்போதைய நிலையில் தமிழகத்தில் 2 எம்பி பதவியும், புதுவையில் ஒரு எம்பி பதவிக்கும் அடுத்தமாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் திமுக தான் 2 எம்பி பதவியையும் கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. இதன்படியே திமுக சார்பில் 2 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். புதுவையில் அதிமுகவைச் சேர்ந்த கோகுல கிருஷ்ணன், ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் 6ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அங்கு அடுத்த மாதம் 4ம் தேதி தேர்தல் நடைபெற போகிறது.
புதுச்சேரி எம்பி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சியினரும் தங்களுக்குத்தான் எம்பி பதவி வேண்டும் என்று கூறி வருகிறார்கள். பாஜக அங்கு எல் முருகனை எம்பியாக்க விரும்பியது. இதுபற்றி பேச பாஜக மேலிட பார்வையாளராக உள்ள நிர்மல்குமார் சுரானா கடந்த வாரம் புதுச்சேரி வந்தார்.
கொடுக்க முடியாது
அம்மாநில முதல்வர் ரங்கசாமியை சந்தித்துப் பேசினார். ஆனால், புதுவையில் பாஜகவுக்கு 2 அமைச்சர், புதுவை சபாநாயகர் பதவி வழங்கப்பட்டு விட்டது. நான் மருத்துவமனையில் இருந்தபோது நியமன எம்எல்ஏக்களை என்னிடம் கேட்காமல் நியமித்து விட்டீர்கள். இதனால் எம்பி பதவியை விட்டுத் தர முடியாது திட்டவட்டமாக தெரிவித்தாக கூறப்படுகிறது.
ரகசியம்
தொடர்ந்து பாஜக மேலிடம் பேசவிருகிறது. ஆனால் பாஜகவிற்கு எம்பி பதவியை ரங்கசாமி விட்டுக்கொடுப்பாரா என்பது பெரும் கேள்வி தான். அதேநேரம் வேட்பாளர் யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கும் ரங்கசாமி, கடைசி நேரத்தில்தான் அறிவிப்பார் என்கிறார்கள் புதுவை வட்டாரத்தில். வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்யும்போதுதான் யார் வேட்பாளர் என்று தெரியவருமாம்.
மத்திய பிரதேசம்
புதுச்சேரியில் ராஜ்யசபா எம்பி பதவி முருகனுக்கு இல்லை என்று தெரிந்ததால், மத்திய பிரதேசத்தில் எம்பியாக்கும் முடிவினை பாஜக மேலிடம் எடுத்துள்ளது. மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த எம்பி தாவர்சந்த் கெலாட், கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு முருகன் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
சர்பானந்த சோனோவால்
அதேபோல அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்பானந்த சோனோவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவரும் சமீபத்தில் ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் அசாம் மாநிலத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அசாம் மாநிலத்தில் இருந்து சர்பானந்த சோனாவாலும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து முருகனும் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.