இருக்கா? இல்லையா?.. வருமா வராதா?.. தமிழகத்தை விஞ்சும் புதுச்சேரி அரசியல் ஷோ
புதுச்சேரி: சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தை விட ஒரு படி மேல் சூடு பிடிக்கிறது புதுச்சேரி அரசியல் களம்.
தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.
இந்த சூழலில் தான் 'புதுச்சேரிக்காரன்னா சும்மாவா' எனும் மோடில் அரசியல் களத்தை தகதகவென வைத்திருக்கிறது என்.ஆர்.காங்கிரஸ்.
ஓராண்டுக்கு பிறகு.. எலக்ஷன் டைமில்.. புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் ஆரம்பம்
பாஜக தலைமையில்
காரைக்காலில் கடந்த பிப்.28ம் தேதி நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ''என்னுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு புதுச்சேரியில் ஆட்சி அமைக்கும்" என்று பேசியிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த என்.ஆர். காங்கிரஸ், புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்ய ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.
சிரிப்பு மட்டுமே பதில்
இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த ராஜ்பவம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ லெட்சுமிநாராயணன் திடீரென என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த லெட்சுமிநாராயணன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ரங்கசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அமித் ஷா மூலம் 'புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி' எனும் வெடிகுண்டை ஏவிய பாஜக, சைலன்ட் மோடில் அத்தனையையும் கவனித்து வந்தது.
விரும்பாத ரங்கசாமி
பாஜகவை விட்டு என்.ஆர். விலக நினைப்பதற்கு முக்கிய காரணம், அமித் ஷாவின் பேச்சு ஒரு காரணம் என்றால், அதன் பின்னால் இருக்கும் விஷயம் தான் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதாவது, காங்கிரஸிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர் நமச்சிவாயத்தை பாஜக முன்னிலைப்படுத்துவதாக என்.ஆர். தரப்பு எண்ணுகிறது. அது உண்மையும் கூட. இதனை கவனித்த ரங்கசாமி, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
'ஓகே' சொல்லும் பாஜக
அதேநேரம், பெரும்பான்மை கிடைக்கும் வகையில் கணிசமான தொகுதிகள் வேண்டும் எனவும் ரங்கசாமி விடாப்பிடியாக நிற்பதும் கூட்டணியில் இழுபறிக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த மார்ச் 2ம் தேதி, ரங்கசாமியை பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் அவரது வீட்டில் வைத்தே சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடம் நடந்த மீட்டிங்கில், பாஜக மேலிடம் அளித்த வாக்குறுதிகளை ரங்கசாமியிடம் சாமிநாதன் தெரிவித்திருக்கிறார். ரங்கசாமியின் கோரிக்கைகளுக்கும் பாஜக தரப்பு ஏறக்குறைய 'ஓகே' சொல்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தனையையும் அமைதியாக கேட்ட ரங்கசாமி, கட்சி நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாக சொல்லி தூதுவரை அனுப்பிவிட்டார்.
ரங்கசாமி உறுதி
இந்த நிலையில் தான், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்.ரங்கசாமியை பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், பா.ஜ.க. எம்.பி. ராஜூசந்திர ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது, பா.ஜ.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராகத் தன்னை அறிவிக்க வேண்டும் என ரங்கசாமி உறுதியுடன் தெரிவித்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ரங்கசாமி கறார்
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர் நிர்மல்குமார், "என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் உள்ளோம். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றார். ஆனால், ரங்கசாமி தரப்போ, முதல்வர் வேட்பாளர் எனும் பாயிண்ட்டில் இருந்து துளி கூட பின்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. பாஜக இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே கூட்டணி நிலவும். இல்லையெனில், அடுத்த நொடியே, கூட்டணியில் இருந்து விலக ரங்கசாமி தயாராக உள்ளார்.
தியானித்த பிறகே முடிவு
அதேசமயம், ரங்கசாமி 'அப்பா பைத்தியம் சாமி'யின் தீவிர பக்தர் என்று கூறும் அவரது ஆதரவாளர்கள், எதுவாயினும் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் அமர்ந்து தியானித்தே முடிவு எடுப்பார். தனது ஆன்மிகப் பயணத்தில் சேலம் கோயிலில் அமர்ந்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாகவும், வெகு விரைவில் அவரே தனது கூட்டணி முடிவை அறிவிப்பார் என்றும் கூறுகின்றனர். பாஜகவும், ரங்கசாமியின் முடிவுக்காக காத்திருக்கிறது. அப்படி, ரங்கசாமி வெளியேறினால், நமச்சிவாயத்தை முன்னிலைப்படுத்தி புதுச்சேரியில் அரசியல் களமாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.