புதுச்சேரிக்கு மீண்டும் வருவேன்.. அதுவும் எப்படி தெரியுமா? கிரண் பேடி வீடியோ.. உச்சகட்ட உருக்கம்
புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி டெல்லி, புதுச்சேரியையும் ஆளுநர் மாளிகையில் தான் வளர்த்த மரங்கள் மற்றும் பறவைகளை பிரிய மனம் இல்லாமல் வீடியோ விட்டு விடைபெறுவதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை ஆளுநராக கடந்த 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர் கிரண்பேடி. டெல்லி சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் படுதோல்வியை சந்தித்த நிலையில் தான் கிரண்பேடி புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக பதவியேற்ற நாராயணசாமி உடன் கடந்த நான்கரை வருடங்களுக்கு மேலாக மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். நிர்வாக ரீதியான விஷயங்களில் தலையிடுவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது என தினசரி இவரது நடவடிக்கைகளால் நாராயணசாமி நொந்துபோனார்.
கிரண்பேடி உறுதி
ஆட்சி அதிகாரத்திற்கு வந்தும் நாராயணசாமியால் முழுமையாக முதல்வராக இயங்க முடியாமல் தவித்தார். இதுஒருபுறம் எனில் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தார். மக்கள் தன்னிடம் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும் என்பதில் கிரண்பேடி உறுதியாக இருந்தார்.
கடும் நடவடிக்கை
அச்சமின்றி புதுச்சேரி மதுபான பார் விவகாரங்களில் கடும் நடவடிக்கை எடுத்தார். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாகுபாடே இல்லாமல் எல்லோரையும் மிரளவைத்தவர் கிரண்பேடி. நாராயணசாமியுடன் அதிகார மோதல் ஒருபக்கம் என்றாலும், நிர்வாக ரீதியாக சிறப்பாகவே செயல்பட்டார் என்று அங்குள்ள பலர் இப்போது சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவதை பார்க்க முடிகிறது.
தமிழிசை நியமனம்
அண்மையில் நாராயணசாமி கிரண்பேடியை நீக்க கோரி புதுச்சேரியில் பெரும் போராட்டம் நடத்தினார்., ஆனால் அப்போது மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் திடீர் திருப்பமாக கடந்த வாரம் புதுச்சேரி ஆளுநர் பதவியில் இருந்து கிரண்பேடி நீக்கப்பட்டார். அவருக்கு பதில் தமிழிசை சௌந்திரராஜன் அங்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
வீடியோ வெளியீடு
கிரண்பேடி ஆளுநராக இல்லாத போதும் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஆளுநர் பதவியில் இருந்து விடை பெற்ற கிரண்பேடி, புதுச்சேரியை பிரிய மனம் அல்லாமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை உள்ளது.
சுற்றுலா பயணியாக வருவேன்
அந்த வீடியோ உடன் வெளியிட்ட ட்வீட் பதிவில், டெல்லிக்கு திரும்பிச் செல்ல உதவுவதற்காக, ராஜ்நிவாஸில் 3 நாட்கள் அனுமதித்த ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி. புதுச்சேரியில் உள்ள லோதி கார்டன்ஸ், நேரு பார்க், ஸ்ரீஃபோர்ட் & ஹட்கோ பூங்கா மற்றும் நான் வளர்த்த மரங்களில் கிளிகளை பார்க்க மீண்டும் வருவேன். சுற்றுலா பயணியாக புதுச்சேரி கடற்கரைக்கு நிச்சயம் ஒரு நாள் வருவேன். என் நண்பர்களை சந்திப்பேன்" இவ்வாறு உருக்கமாக கூறியுள்ளார்.