புற்றுநோய் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது.. கௌதமி நெகிழ்ச்சி
புதுச்சேரி: முடியிழந்த புற்று நோயாளிக்கு தானமாக கிடைக்கும் தலைமுடி அவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மனப்பக்குவத்தையும் தரும் என சர்வதேச புற்று நோய் தினத்தில் நடிகை கௌதமி பேச்சு.
இன்று சர்வதேச புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் புற்று நோயினால் பாதிக்கப்படக்கூடிய நோயாளிகளுக்கு ஹிமோ தெரப்பி என்ற சிகிச்சை அளிக்கும்போது அவர்களது தலைமுடி அனைத்தும் உதிர்ந்து போய்விடும். இது குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும்போது நோய்தாக்கம் ஒரு பக்கம் இருப்பின், தலைமுடி இழப்பு அவர்களுக்கு மிகுந்த வேதனையை தருகின்றது.
இதற்காக செயற்கை தலைமுடிகள் பொருத்தப்படுகின்றது. இருப்பினும் மனித உடலில் இருந்து எடுக்கப்படும் தலைமுடியை கொண்டு தயாரிக்கப்படுவது இயற்கையான அனுபவத்தை நோயாளிகளுக்கு கிடைக்கின்றது.
அந்த வகையில் சர்வதேச புற்றுநோய் தினமான இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் மாணவிகளின் தலைமுடிகளை தானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நடிகை கௌதமி ஆகியோர் பங்கேற்று புற்று நோயாளிகளுக்காக தலைமுடியை தானமாக வழங்கிய சிறுமி முதல் மருத்துவ மாணவிகள் என 350 பேருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கௌதமி, 15 வருடங்களுக்கு முன்பு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தேன். ஆனால் என்னுடைய தன்னம்பிக்கையால் புற்றுநோயை போராடி எதிர்கொண்டு தற்போது நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். என்னைப்போன்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், புற்றுநோய் குறித்த பயம் மக்கள் மனதில் இருந்து இன்னும் நீங்கவில்லை. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மருத்துவமனைகளை அதிகரிக்க வேண்டும் என்றார். அதேபோல் முடியிழந்த புற்று நோயாளிக்கு தானமாக கிடைக்கும் தலைமுடி அவர்களுக்கு வாழ்வில் தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய மனப்பக்குவத்தையும் தரும் என்றார்.