பெண் வீசிய யார்க்கரை "சிக்ஸருக்கு" மாத்திய நாராயணசாமி.. ஆனா கெட்ட பெயராய்ருச்சு பாருங்க!
நாராயணசாமி மொழிபெயர்ப்பு விவகாரம் சர்ச்சையாக மாறி உள்ளது
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தன்னை நோக்கி வீசப்பட்ட யார்க்கர் பந்தை அப்படியே வாரி அடித்து சிக்ஸருக்குத் தூக்கி விட்டார். அவரது சமயோஜிதம் பாராட்டுக்குரியது என்றாலும் கூட அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும், ஏன் ராகுல் காந்திக்குமே கூட கெட்ட பெயராகி விட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரிக்கு நேற்று வந்திருந்தார். மீனவப் பெண்களை அவர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராகுல் காந்தியை பார்த்த உற்சாகத்தில் மீனவர்கள் தங்களது குற்றம், குறைகளை அவரிடம் கூறினார்கள்.
ராகுல் காந்தியும் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக் கொண்டார். அப்போது ஒரு பெண் எழுந்து ராகுல் காந்தியிடம் பேச ஆரம்பித்தார். அவர் தமிழில்தான் பேசினார்.
புகார்
அவர் பேசப் பேச அந்த இடமே இறுக்கமாக மாறியது. குறிப்பாக நாராயணசாமி நெளிய ஆரம்பித்து விட்டார். காரணம், நாராயணசாமி குறித்து புகார் பட்டியலை அவர் வாசித்ததுதான்! இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை நாராயணசாமி.. ஆனாலும் அமைதியாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தார் நாராயணசாமி. அந்தப் பெண் பேசி முடித்ததும், இவர் என்ன சொல்கிறார் என்று நாராயணசாமியிடம் ராகுல் காந்தி கேட்டார்.
நிவர் புயல்
கேட்ட வேகத்தில் செமையாக பதிலளித்தார் பாருங்க நாராயணசாமி.. கூட்டமே ஆடிப் போய் விட்டது. அதாவது,"நிவர் புயல் வந்துச்சு இல்லையா, அப்போது நான் வந்து அவர்களைப் பார்த்தேன்.. அதைத்தான் இவர் பாராட்டி சொல்கிறார்" என்று நாராயணசாமி பதிலளிக்க கூட்டமே ஆடிப் போய் விட்டது. நாராயணசாமி வரவில்லை என்பதுதான் அந்தப் பெண் கூறிய குற்றச்சாட்டு. ஆனால் அப்படியே அதைத் திருப்பிப் போட்டு விட்டார் சாமி.
முதல்வர்
நாராயணசாமி அந்த நேரத்தில் அந்த பிரச்சினையை சமயோஜிதமாக சமாளித்து விட்டார்தான். ஆனால் அது சரியா.. பொய் சொல்லலாமா.. ஒரு முதல்வரே இப்படி பச்சையாக பொய் சொன்னால், தவறாக மொழி பெயர்த்து தனது தலைவருக்குத் தெரிவித்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரண்பேடி
நாராயணசாமியின் திறமை குறித்து அனைவருக்குமே தெரியும். அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது செயல்பட்ட வேகம், துரிதம் அனைவரும் அறிந்ததே. அதிலும் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடியை அவர் எதிர்கொண்ட விதம் அனைவரையுமே வியக்கவும் வைத்தது. அப்படிப்பட்டவர் தனது தேசியத் தலைவரிடம் அத்தனை பேர் கூடியிருந்த இடத்தில் பொய்யாக பேசியது தவறில்லையா என்று பலரும் கேட்கிறார்கள்.
ராகுல்
இதனால் நாராயணசாமிக்கு மட்டுமல்லாமல், ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்குமே கூட தான் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது என்று பலரும் சொல்கிறார்கள். அந்தப் பெண்ணிடமிருந்து நாராயணசாமி தப்ப நினைத்து புலியிடம் போய் சிக்கிக் கொண்ட கதையாகி விட்டது கடைசியில்!