புதுவையில் பயங்கரம்.. சபாநாயகர் வைத்திலிங்கம் வீட்டுக்குப் பக்கத்தில் பெண் பச்சைப் படுகொலை
புதுச்சேரி: புதுச்சேரியில் சபாநாயகர் வைத்தியலிங்கத்தின் வீட்டின் அருகே பால் வாங்க சென்ற இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே மடுகரை கிராமத்தில் கங்கா( 27) என்ற பெண் தனது இரு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது வீட்டில் இருந்து வெளியே வந்த கங்கா, அருகில் உள்ள கடையில் பால் வாங்கி கொண்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சபாநாயகர் விட்டு அருகே சம்பவம்
சபாநாயகர் வீட்டின் அருகே வீட்டிற்கு திரும்பிகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கங்காவின் கழுத்தை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் கங்கா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மடுகரை போலீசார் கங்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கைரேகை நிபுணர்கள்
பின்னர், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கலப்புத் திருமணம்
இதனிடையே கொலையுண்ட கங்கா, ராஜீ என்பவரை எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டு தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
கணவருடன் கருத்து வேறுபாடு
இந்நிலையில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கங்கா புதுச்சேரி மாநிலம் மடுகரை கிராமத்தில் இரண்டு வருடங்களுக்கு முன் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து தனது இரண்டு ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
கணவருடன் சண்டை
வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கங்காவுடன் கருத்து வேறுபாடு இருந்து வந்தாலும், கங்காவின் கணவரான ராஜீ அடிக்கடி கங்காவின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். கங்காவின் வீட்டிற்கு சென்று வரும்போதெல்லாம் இருவருக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கணவரிடம் விசாரணை
இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் கங்காவின் கணவரான ராஜீவிடம் மடுகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதிகாலையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி மட்டுமல்லாமல், சபாநாயகர் வைத்திலிங்கத்தின் வீட்டிற்கு அருகிலேயே கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.