உறவுப் பெண்ணை கர்ப்பமாக்கிய பூ வியாபாரி.. குடும்பமே சேர்ந்து அடி வயிற்றில் அடித்து உதைத்த கொடூரம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய பூ வியாபாரி, திருமணத்திற்கு மறுத்து இளம்பெண்ணை குடும்பத்தோடு சேர்ந்து அடித்து உதைத்து கர்ப்பத்தை கலைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை மஞ்சினிநகரை சேர்ந்தவர் கோபி (25). பூ வியாபாரி. இவரது உறவுக்காரப் பெண் ஆனந்தி(20). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து, நெருங்கி பழகி வந்துள்ளனர். இதில் ஆனந்தி கர்ப்பம் அடைந்துள்ளார். இதையடுத்து ஆனந்தி கோபியை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் கோபி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் தனது அக்காவிற்கு திருமணம் முடிந்தபிறகு, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஆனந்தி, கோபி வீட்டிற்கு சென்று, கோபியை திருமணம் செய்து வைக்குமாறு, அவருடைய பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் கோபி மற்றும் அவர்களது உறவினர்கள் ஆனந்தியை கடுமையாக தாக்கி, கர்ப்பத்தை கலைக்கும் நோக்கில் ஆனந்தி வயிற்றில் அடித்து உதைத்துள்ளனர். இதனால் ஆனந்தி மயக்கமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். தகவலறிந்த ஆனந்தியின் பெற்றோர், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது மருத்துவமனையில் ஆனந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் ஆனந்தி புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் கோபி, அவரது உறவினர்கள் முத்து, லதா, சண்முகம் ஆகியோர் மீது 8 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் கோபியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, கர்ப்பத்தை கலைக்க காதலனின் குடும்பமே சேர்ந்த இளம்பெண்ணை அடித்து உதைத்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.