பகலில் ஓட்டலில் வேலை.. இரவு கஞ்சா விற்பனை.. சிக்கிய இளைஞர்.. 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
புதுச்சேரி: புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்துவந்த வாலிபர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள மாலிற்கு அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக உருளையன்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர்.
அப்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்றுக்கொண்டிருந்ததை கண்டனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். அவரை விரட்டி பிடித்த போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். சோதனையில் அவரிடம் 600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுச்சேரி முருகம்பாக்கம், வில்லியனூர் மெயின்ரோட்டை சேர்ந்த தேவா என்பது தெரியவந்தது. சமையற்கலை படிப்பு முடித்துள்ள தேவா புதுச்சேரியில் உள்ள பிரபல ஓட்டலில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
இதனால் கஞ்சா விற்பனை செய்பவர்களின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் மூலம் ஓட்டலில் வேலை செய்துகொண்டே இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்ய தொடங்கியுள்ளார். புதுச்சேரியில் உள்ள சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து செல்போன் மூலம் விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் கடலூர் சாலையில் ஒருவருக்கு கஞ்சா கொடுக்க வந்தபோது தேவா போலீசாரிடம் சிக்கிக்கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தேவா கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ், சீனுவாசன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து மேலும் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.
புதுச்சேரியில் அண்மை காலமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் அதிகம் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. எனவே கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.