இளைஞருக்கு சரமாரி பைப் அடி, கத்திக் குத்து.. அதிமுக எம்எல்ஏ தம்பி மீது பரபர புகார்
புதுச்சேரி: புதுச்சேரியில் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் தம்பி, இளைஞர் ஒருவரை அடைத்து வைத்து கத்தி, பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியை அடுத்துள்ள மடுகரையை சேர்ந்த சபரி என்பவர் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தீபன் என்பவரிடம் 10 இலட்சம் ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியதாகவும், வாங்கிய கடனுக்கான வட்டியை சபரி சரிவர கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபன் புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் தம்பியான சந்துரு உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து, சபரியை வேல்ராம்பட்டு பகுதிக்கு வரவழைத்து, அங்கு ஒரு நாள் முழுவதும் அறையில் அடைத்து வைத்து பைப், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும் போலீசுக்கு சென்றால் கொன்று விடுவதாக சபரியை அவர்கள் மிரட்டியுள்ளனர்.
மேலும் தாங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், ஏற்கனவே தங்கள் மீது ஆறு கொலை வழக்கு உள்ளதாகவும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என மிரட்டியதாக சபரி தெரிவித்துள்ளார். தற்போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து சபரி பேசும் 5 நிமிட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இச்சம்பவம் குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் தம்பி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.