ஹோட்டலில் வாங்கிய நூடுல்சை சாப்பிட்ட இளைஞர் பரிதாப பலி.. புதுச்சேரியில் சோகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஹோட்டலில் நுரித உணவை வாங்கி சாப்பிட்ட தொழிலாளி, உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குயவர்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டி பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று இரவு பணிக்கு சென்ற மணிட்கண்டன், அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நூடுல்ஸ் வாங்கி வந்து சாப்பிட்டுள்ளார். நூடுல்சில் பாதி மட்டும் இரவு சாப்பிட்ட மணிகண்டன், மீதியை வைத்திருந்து இன்று காலை சாப்பிட்டுள்ளார்.
அப்போது மணிகண்டனுக்கு வாந்தி மற்றும் பயங்கரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே மணிகண்டனுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். கெட்டுப்போன நூடுல்சை சாப்பிட்டதால் தான் மணிகண்டன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஆரோவில் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நூடுல்ஸ் சாப்பிட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.