ரத்தம் கிடைக்காமல் பிரசவத்தில் தவித்த பெண்.. தக்க நேரத்தில் உதவிய புதுவை காவலர், இளைஞர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரிய வகை ரத்தமான ஓ பாசிட்டிவ் ரத்த வகை கிடைக்காமல் தவித்த நிலையில், அவருக்கு உயர்துளி தன்னார்வல அமைப்பு மூலம் ரத்தம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஆண் குழந்தை பிறந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஈய்யனூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி விஜயலட்சுமி (25). இவர் பாம்பே ஓ பாசிட்டிவ் ரத்தம் (எச்எச் பிரிவு) என்ற அரியவகை ரத்தப் பிரிவைச் சேர்ந்தவர். நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்துக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், விஜயலட்சுமிக்கு ரத்தம் குறைவாக உள்ளதால், பாம்பே ஓ பாசிட்டிவ் ரத்த வகையை ஏற்பாடு செய்யும்படி, அவரது தாய் அலமேலுவிடம் கூறியுள்ளனர். இதையறிந்து செய்வதறியாது தவித்த அலமேலு, மருத்துவமனை வளாகத்திலிருந்த பொதுமக்களிடம் தன் மகளை காப்பாற்ற வேண்டி கதறி அழுதுள்ளார்.
இதைக் கேட்ட அங்கிருந்த புதுச்சேரி ஆயுதப்படை காவலர் செல்வம், உயிர்த்துளி ரத்ததான அமைப்பை தொடர்பு கொண்டுள்ளார். இரண்டரை லட்சம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் இந்த அரியவகை ரத்தத்தை, ஊரடங்கு காலத்தில் தேடி கண்டுபிடிப்பது உயிர்துளி அமைப்புக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இதையடுத்து தொடர் முயற்சி காரணமாக இதே அரிய ரத்த வகையைச் சேர்ந்த, உயிர்துளி அமைப்பின் தன்னார்வலர் சந்தோஷ் , உயிர்த்துளி வாகனத்தில் ஜிப்மர் ரத்த வங்கிக்கு வந்து, பாம்பே ஓ பாசிட்டிவ் வகை ரத்தத்தை தானமாக வழங்கினார். தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம் விஜயலட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
தகவலையறிந்த விஜயலட்சுமியின் தாய் அலமேலு கண்ணீருடன், ரத்தானம் வழங்கிய சந்தோஷுக்கும், உதவிய ஆயுதப்படை காவலர் செல்வத்துக்கும் நன்றி தெரிவித்தார்.
இது தொடர்பாக காவலர் செல்வம் கூறுகையில், ஜிப்மரில் பிரசவத்துக்காக எனது அண்ணியை சேர்த்துள்ளோம். அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால், நான் விடுமுறை எடுத்து அவருக்கு உதவி செய்ய அங்கு இருந்தேன். அப்போது பெண் ஒருவர் தன்னுடைய மகளுக்கு பாம்பே ஓ பாசிட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுவதாக அழுதுகொண்டு கூறினார்.
இதையடுத்து வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அதோடு பலரை தொடர்பு கொண்டு கேட்டேன். இறுதியாக எனது நண்பர் ஒருவர் உயிர்த்துளி குழுவின் எண்ணை கொடுத்தார். அதன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தேன். அதன்பின்னர் அந்த குழுவினர் ரத்தம் ஏற்பாடு செய்தனர் என்றார்.
ரத்ததானம் வழங்கிய இளைஞர் சந்தோஷ் கூறுகையில், ரத்தம் வேண்டுமென செல்போனில் நேற்று தொடர்பு கொண்டு கேட்டனர். தொடர்ந்து நான் அங்கு சென்று, நாள் முழுவதும் காத்திருந்து, ரத்தம் வழங்கினேன். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன் என கூறினார். ஆபத்தான நேரத்தில் பெண்ணுக்கு அரிய வகை ரத்தம் கிடைக்க உதவிய காவலர், மற்றும் ரத்தம் வழங்கிய இளைஞரை பலரும் தற்போது பாராட்டி வருகின்றனர்.