குளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி அண்ணன்- தம்பி பலி.. புதுக்கோட்டையில் சோகம்
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே மூன்று சிறுவர்கள் குளிக்க சென்ற நிலையில் அண்ணன் தம்பி இருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாத்தூர் அருகேயுள்ள ஆவூரை சேர்ந்தவர் சபரி. இவரது மகன் சந்தோஷ்(12). திருநெல்வேலியை சேர்ந்த ஜீவன்ராஜ் என்பவர் ஆவூரில் குடும்பத்துடன் தங்கி பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன்கள் ஜாக்சன்(12), ஜான்சன்((9).
இந்நிலையில் இன்று மதியம் சந்தோஷ், ஜாக்சன், ஜான்சன் ஆகிய 3 பேரும் அங்குள்ள பெரிய குளத்திற்கு குளிக்க சென்றனர். அப்போது நீச்சல் தெரியாத அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினர்.
அருகில் இருந்தவர்கள் இதைக் கண்டு குளத்தில் இறங்கி அவர்களை மீட்க முயன்றனர். இதில் ஜாக்சனும், ஜான்சனும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை பொதுமக்கள் மீட்டனர்.
சிறுவன் சந்தோஷ் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.