2 நாட்களில் 8 தமிழக மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்
புதுக்கோட்டை: கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, நேற்று முன்தினம் திருப்புனவாசலைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, நடுக்கடலில் படகு சேதமடைந்தது. இதனால், கடலில் தவித்த அவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், கோட்டைப் பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன் பிடிக்க சென்ற 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அவர்களை வரும் 10 ந் தேதி வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பது, மீனவ கிராமங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.