திமுக வெற்றி பெற்றதா அறிவிச்சிட்ட.. அரசுக்கு கெட்ட பேரு.. அதிமுக எம்எல்ஏ ஆவேசம்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பொங்கல் பரிசுத் திட்டம் வழங்கும் மேடையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் முன்னிலையில் தேர்தலில் தான் சொன்ன வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவிக்காத மாவட்ட வழங்கல் அலுவலரை ஒருமையில் திட்டிய அதிமுக எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 ஆம் 14 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்றாவது ஒன்றிய கவுன்சிலர் வார்டில், அதிமுக சார்பில் முத்து சுப்பிரமணியனும், திமுக சார்பில் செல்வம் என்பவரும் வேட்பாளராக போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் திமுக சார்பில் போட்டியிட்ட செல்வம், அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்து சுப்பிரமணியத்தை விட 1780 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனிடையே செல்வம் வெற்றிபெற்றதாக அறிவிக்க கூடாது என்று, கந்தர்வகோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து பிரச்சனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் செல்வத்தை வெற்றி பெற்றதாக அறிவித்து உடனடியாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரி திமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், குன்றாண்டார் கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அக்பர் அலி, திமுக வேட்பாளர் செல்வம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழை வழங்கியுள்ளார்.
பதவியேற்ற கையோடு சுவர் ஏறி குதித்து தப்பியோடிய கவுன்சிலர்.. காரணத்தை கேட்டா சிரிச்சிடுவீங்க
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்திருந்தார். அவருடன் கந்தர்வகோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் அதிமுக நகர செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினரும் வந்திருந்தனர்.
மேடையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அக்பர் அலியும் இருந்தார். அப்போது, பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கி கொண்டிருந்தபோது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் மாவட்ட வழங்கல் அதிகாரி அக்பர் அலியை திமுகவிடம் பணம் வாங்கிக் கொண்டு வெற்றியை அறிவித்து விட்டதாக கூறி ஒருமையில் பேசி மேடையை விட்டு கீழே இறங்கும்படி கூறினார்.
இதனையடுத்து அரசு அதிகாரி அக்பரலி மேடையைவிட்டு செய்வதறியாது கீழே இறங்கினார். அமைச்சர் முன்னிலையில் ஒரு அரசு அலுவலரை எம்எல்ஏ மற்றும் அதிமுக நகரச் செயலாளர் ஒருமையில் திட்டியது புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.