பல கோடி மதிப்புள்ள நகைகளுடன் மாயமான வங்கி ஊழியர்? கடலில் சடலமாக கண்டெடுப்பு.. புதுகையில் பரபரப்பு
Recommended Video
புதுக்கோட்டை: நகைகளுடன் மாயமானதாக கூறப்பட்ட வங்கி ஊழியர் கடலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருக்கட்டளையை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் அலுவலக உதவியாளராக கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் கடந்த மாதம் 22-ஆம் தேதி வீட்டிலிருந்து இவருக்கு சொந்தமான காரில் சென்றவர் வீடு திரும்பவில்லை.
காட்டுப் பகுதி
இதையடுத்து இவரது மனைவி ராணி புதுக்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரிமுத்துவிற்கு சொந்தமான கார் வல்லத்திராக்கோட்டையில் உள்ள தைலமர காட்டு பகுதியில் எரிந்த நிலையில் கிடந்தது.
சந்தேகம்
அந்த காரில் கவரிங் வளையல்கள் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் பாதி எரிந்த நிலையில் கிடந்தன. மாரிமுத்து திடீரென காணாமல் போனதால் அவர் வங்கியில் இருந்து நகைகளை எடுத்து சென்றிருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
தனிப்படை
இதையடுத்து கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதி வங்கி அதிகாரிகள் மாரிமுத்து பணியாற்றிய வங்கியில் நகைகள் சரியாக இருக்கின்றனவா என சோதனை செய்ததில் அவை சரியாக உள்ளதா என கடந்த 4 நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மாரிமுத்துதான்
இந்த நிலையில் மணமேல்குடி கோடியக்கரை கடலில் ஆண் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து மாரிமுத்துவின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து இறந்தது மாரிமுத்துதான் என அடையாளம் காட்டினார்.
கடலில் வீசி
போலீஸார் அந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பல கோடி மதிப்பிலான நகைகளுடன் மாயமானதாக கூறப்படும் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டாரா இல்லை அவரை யாரேனும் கொலை செய்து கடலில் வீசிவிட்டனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.