விராலிமலையில் ஐடிசி தொழிற்சாலை... 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு... முதலமைச்சர் பேச்சு..!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐடிசி ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலை சென்றார்.
அங்கு ரூ.100 கோடி மதிப்பில் 55 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள ஐடிசி தொழிற்சாலையை திறந்து வைத்த முதலமைச்சர் அந்த தொழிற்சாலை மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2,200 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கூறினார். தொழில்மயமான மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விராலிமலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் நிறுவப்பட்டிருந்த சீறி வரும் ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை என்றும் விராலிமலை வீரமிக்க மண் எனவும் புகழாரம் சூட்டினார்.
முன்னதாக காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் கவிநாடு கண்மாயை நேரில் ஆய்வு செய்த அவர் காவிரி-குண்டாறு இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை கொடுத்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு புதுக்கோட்டை சென்ற முதல்வர், அங்கு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கேத் லேப் வசதியை தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் அவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிகிறார்.