பொத்தி பொத்தி பாதுகாத்தும்.. புதுக்கோட்டையில் கொரோனா தொற்று வந்தது எப்படி.. பரபர தகவல்
புதுக்கோட்டையில் இளைஞருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது
புதுக்கோட்டை: முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. கண்ணுக்குள்ளேயே பொத்தி பொத்தி வைத்து மாவட்டத்தை கண்காணித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.. ஆனால் எப்படியோ புதுக்கோட்டை கிராமத்துக்குள் ஊடுருவி விட்டது.. பாதிக்கப்பட்ட இளைஞர் டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவரின் மகனாம்!!
Recommended Video
அரசு மருத்துவமனைகளில் ஆய்வு, செய்தியாளர் கூட்டம் என்று ஒரு பக்கம் இருந்தாலும் தன்னுடைய தொகுதிக்குள் வைரஸ் புகுந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்..
தற்காப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டார். சென்னையில் பணி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாவட்டத்துக்கு நேரடியாகவே வந்து ஆய்வு செய்தார்.. அப்படி இருந்தும் புதுக்கோட்டைக்கு கொரோனா வந்து விட்டது.
இதே புதுக்கோட்டையில் டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.. கொரோனா நிவாரண நிதியை தொகுதிக்குள் விஜயபாஸ்கர் தரும்போது, அவருடன் பின்னாடியே ஆதரவாளர்கள் கும்பல் வந்தது.. ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளது, யாரும் தன்னுடன் வரக்கூடாது என்று சொல்லிவிட்டு தனியாகத்தான் நிவாரண நிதியை ஊர் முழுக்க தந்து வந்தார்.
டெல்லி மாநாடு
இப்படி கண்ணுக்குள்ளேயே வைத்து பார்க்கப்பட்ட தொகுதியில் தொற்று வந்துள்ளது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது. சம்பந்தப்பட்டவர் டெல்லி மாநாட்டுக்கு போய் வந்தவரின் மகன்! ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்துள்ள 4895 நபர்களில் 3645 நபர்களின் 28 நாட்கள் கண்காணிப்பு காலம் முழுமையாக முடிவடைந்தது... அதனால் மீதமுள்ள 1250 நபர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதி
மேலும் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஊர் திரும்பிய 15 பேர் அறந்தாங்கி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதை அடுத்து கடந்த 10 ம் தேதி அவர்கள் அனைவருமே வீட்டுக்கும் அனுப்பப்பட்டு விட்டனர். எனினும் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த ஒரு நபரின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
சுற்றி எட்டு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் புதுக்கோட்டையில் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு இல்லாமல் இருந்தது.டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தது இவரது அப்பாதான்.. அவருக்கு 2 முறை சோதனை மேற்கொண்ட போதும் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லாத சூழ்நிலையில் அவரது மகனுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதுதான் அதிர்ச்சியாக உள்ளது.
டெஸ்ட்
இது சுகாதாரத்துறையினரிடையை குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அப்பா டெல்லி வந்த உடனேயே டெஸ்ட் எடுத்து கொள்ளவில்லையா? அதற்கு முன்பே இந்த தொற்று பரவிவிட்டதா? அல்லது வேறு யார் மூலமாவது மகனுக்கு பரவியதா என்று தெரியவில்லை. அந்த இளைஞர் வசித்த கிராமத்தைச் சுற்றி எட்டு கிலோமீட்டர் தொலைவிலான பகுதிகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் வசித்து வந்த பகுதியின் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.