"அதிமுகவின் தற்போதைய நிலைக்கு டெல்லி தான் காரணம்" டிடிவி தினகரன் ஓபன் டாக்!
ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரையும் ஒன்றிணைக்க டெல்லியில் இருப்பவர்களால் முடியும் என்று டிடிவி தினகரன் கருத்து
புதுக்கோட்டை: ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு டெல்லி தான் காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதேபோல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்கும் இரட்டை இலை சின்னம் கிடைக்காதது போல் சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வந்தார். முன்னதாக புதுக்கோப்பை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவுக்கு இதுபோன்ற நிலை வந்ததற்கு காரணமே டெல்லி தான்.
ஈரோட்டில் களமிறங்கும் டிடிவி தினகரன்? இரட்டை இலையும் நிச்சயம் முடங்குமாம்.. அவரே சொன்னதை கேளுங்க
டிடிவி தினகரன் பேட்டி
டெல்லியில் உள்ளவர்கள் நினைத்தால் தான் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒன்றிணைக்க முடியும். நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பதவி சண்டை போட்டுக்கொண்டு சுயநலமாக உள்ளனர். தற்போது அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. 2017ல் வழக்கை மையமாகக் கொண்டு நான் வேட்பாளராக போட்டியிடும் போது இரட்டை இலை சின்னத்திற்கு தடை கொடுத்ததை போல் தற்போதும் இரட்டை இலை சின்னத்திற்கு தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்தார்.
பாஜக வளர்ச்சி
தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, வரும் 27ம் தேதி அமமுக நிர்வாகிகளுடன் கலந்து பேசி ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பாஜகவின் வளர்ச்சி பற்றிய கேள்விக்கு, ஒரு கட்சி பலவீனமானதை வைத்து இன்னொரு கட்சி வளர முடியாது மக்கள் நினைத்தால் தான் வளர முடியும். பாஜக வளர்ந்து உள்ளதா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்.
அனைவரும் பாதிப்பு
முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி செய்த தவறால் தான் திமுக ஆட்சிக்கு வந்தது. கடந்த 20 மாத காலத்தில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் அதற்கு எதிர்மறையாக செயல்படுகின்றனர். ஏழை எளிய மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். திமுக என்னதான் கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் மக்களை சந்தித்து இதனை எடுத்துரைத்து வாக்குகள் கேட்டு திமுகவை தோல்வியுறச் செய்ய முயற்சிப்போம் என்று தெரிவித்தார்.
கமலாலயம்
ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நிர்வாகிகள் கமலாலயம் சென்றது பற்றிய கேள்விக்கு, 1998, 2004 உள்ளிட்ட தேர்தல்களில் பாஜகவோடு ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் கூட்டணி வைத்தார். அதேபோல 2014ல் பாஜகவை எதிர்த்து தேர்தலை சந்தித்தார். தற்போது ஜெயலலிதாவோ, எம்ஜிஆரோ இல்லை. அதனால் அவர்கள் கமலாலயம் செல்வதை நாம் விமர்சனம் செய்ய முடியாது என்று கூறினார்.
தேர்தல் ஆணையம்
பின்னர் இரட்டை இலை சின்னம் பற்றி கூறுகையில், தற்போதைய நிலைமையை வைத்து பார்த்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவருக்குமே இரட்டை இலை சின்னம் கிடைக்காதது என்பது போல் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.