பழனிக்கு பாத யாத்திரை சென்ற பக்தர்களுக்கு திடீர் வாந்தி.. மயக்கம்.. தீவிர சிகிச்சை
பழனி சென்றுவந்த பக்தர்கள் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை: பழனிக்கு பாதயாத்திரை சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அன்னவாசல் மற்றும் புதுக்கோட்டை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே ஆரியூர் என்ற பகுதி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு குழுவாக, கடந்த 26ம் தேதி பழனிக்கு பாதயாத்திரை சென்றார்கள்.
அங்கே தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றி, சாமி தரிசனமும் செய்துவிட்டு, நேற்று முன்தினம் இரவு ஊர் திரும்ப தயாரானார்கள். பொதுவாக பாதயாத்திரை செல்பவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியிலேயே சமைத்து சாப்பிடுவதுதான் வழக்கம்.
வாந்தி, மயக்கம்
அதன்படி, ஆரியூர் பக்தர்களும் ஊருக்கு கிளம்புவதற்கு முன்பு எல்லாரும் ஒன்றாக சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நேற்று காலை, ஆரியூர் வந்தபோது அவர்களுக்கு திடீரென மயக்கமும் வாந்தியும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சை
உடனடியாக மதியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடனர். மேலும் பலர், புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும், சிலர் தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பாதிப்புக்கு உள்ளான அனைவருக்கும் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.
உணவில் நச்சுத்தன்மை?
உணவு செரிக்காத காரணத்தினால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் அல்லது சாப்பிட்ட உணவில் ஏதாவது நச்சுத்தன்மை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. பக்தர்கள் சிகிச்சை பெறுவதை அறிந்த அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ராமசாமி அன்னவாசல் மற்றும் மதியநல்லூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
போலீசார் விசாரணை
எனவே அன்னவாசல் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள். பாதயாத்திரை சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்படி ஒரே நேரத்தில், சுகவீனம் அடைந்து பாதிப்புக்கு உள்ளான சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.