வாழ்வின் பிறவிப்பயனை அடைந்துள்ளேன்...காவிரி-குண்டாறு இணைப்பு திட்ட விழாவில் எடப்பாடியார் உருக்கம்!
புதுக்கோட்டை: காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் என் வாழ்நாளில் நான் பிறந்த பிறவிப் பயனை அடைந்துள்ளேன் என்று எண்ணுகிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
Recommended Video
நாங்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு நடந்தாய் வாழி காவிரி திட்ட அனுமதியே சாட்சி என்றும் அவர் கூறினார்.
5 ஆண்டுகளில் இருமுறை விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததும் அதிமுக அரசுதான் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
மக்களின் 100 ஆண்டு கனவு... காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
முதல்வர் அடிக்கல் நாட்டினார்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம் குன்னத்தூர் ஊராட்சியில் ரூ.6,941 கோடி மதிப்பில் காவிரி - தெற்கு வெள்ளாறு - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூரில் நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பல்வேறு அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் 100 ஆண்டு கனவு
வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையிலிருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் மூலமாக இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42 ஆயிரத்து 170 ஏக்கர் நிலங்களும் பயன்பெறும். 118.45 கி.மீ நீளத்திற்கு கட்டளைக் கால்வாயிலிருந்து கால்வாய் வெட்டப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. மேலும் கரூர், திருச்சி, புதுக்கோட்டையில் குடிநீர் ஆதாரம் மேம்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
பிறவிப்பயன் அடைந்துள்ளேன்
இந்த விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்தாய் நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் வாழ்வில் இன்றைய நாள் ஒரு பொன்நாள் ஆகும். காவிரி-குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம் என் வாழ்நாளில் நான் பிறந்த பிறவிப் பயனை அடைந்துள்ளேன் என்று எண்ணுகிறேன்.
விவசாயிகளுக்கு நன்மை
லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைய இந்த திட்டத்துக்கு நிலம் தந்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீர் மேலாண்மை திட்டத்தில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது. நாங்கள் மத்திய அரசு சொல்வதை கேட்டு வருவதாக கூறுகின்றனர். நாங்கள் சொல்வதை மத்திய அரசு கேட்கிறது என்பதற்கு நடந்தாய் வாழி காவிரி திட்ட அனுமதியே சாட்சி. ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம். அதிமுக அரசு விவசாயிகளுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளது.
புதுக்கோட்டை அதிமுகவின் கோட்டை
5 ஆண்டுகளில் இருமுறை விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொண்டு வந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ததும் அதிமுக அரசுதான். புதுக்கோட்டை மாவட்டம் அதிமுகவின் கோட்டை ஆகும். இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் 74 அம்மா மினி கிளினிக்குகள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.