கஜா புயலுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தை வங்கி கடனுக்கு வரவு வைத்ததாக விவசாயி புகார்
புதுக்கோட்டை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கியதை கல்விக் கடனுக்காக வரவு வைத்துக் கொண்டதாக விவசாயி ஒருவர் வங்கி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகள், மரங்கள் மற்றும் விவசாயம் முற்றிலும் சேதமடைந்துள்ளது இவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்படும் நிவாரணத் தொகையை பல வங்கிகளில் பழைய கடன்களுக்கு வரவு வைத்துக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
கீரமங்கலம் அருகே அதிர்ச்சி
இதையடுத்து புயல் நிவாரணத்தை வங்கிகள் கடனுக்கு வரவு வைக்கக் கூடாது என்று தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கீரமங்கலம் அருகே ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி
கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது மகள் ரம்யாவுக்காக கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சேர்த்தார்.
தென்னை மரங்கள்
இந்த சூழலில் புயலால் ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதற்காக அவருக்கு ரூ. 34 ஆயிரம் நிவாரணத் தொகையை அரசு, ராஜேந்திரனின் வங்கிக் கணக்கில் செலுத்தியது.
கல்விக் கடனுக்காக
இதுகுறித்து தகவலறிந்த ராஜேந்திரன் வங்கிக்கு சென்று நிவாரணத் தொகையை பெற சென்றிருந்தார். அப்போதுதான் வங்கி நிர்வாகம் அந்த தொகையை மகளின் கல்வி கடனுக்காக வரவு வைத்துக் கொண்டது தெரியவந்தது.
கடன் மற்றும் வட்டி
அதுபோல் அவரது மனைவி ராணி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் ஊதியத்தையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக் கொண்டதும் தெரியவந்தது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்ட நிலையில் வங்கி நிர்வாகத்தின் செயலால் அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.