இதெல்லாம் கஜாவுக்கு தெரியுமா.. மாயமான உயிர்.. திரும்பி வந்த செல்லங்கள்.. சந்தோஷத்தில் நெடுவாசல்
மீண்டும் நெடுவாசல் கிராமத்துக்கே வவ்வால்கள் திரும்பி வந்தன.
புதுக்கோட்டை: "அந்த மரத்திலிருந்து ஒரு குச்சியைகூட ஒடிக்க மாட்டோம்... அப்படி ஒரு பாசம் வெச்சிருந்தோம்.. ஏன் தெரியுமா.. எங்க உசுரு இந்த வவ்வால்கள்" என்கிறார்கள் மக்கள்!!
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் ஒரு இடத்தில் சுமார் 3 ஏக்கருக்கு புதர்ச்செடிகள்தான். அந்த புதர்களுக்கு நடுவில்தான் படர்ந்து விரிந்த இந்த ஆலமரம் இருக்கிறது.
விசேஷம் என்னவென்றால், அதன் ஒவ்வொரு கிளையிலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த மரத்துக்கு அடியில ஒரு அய்யனார் கோயில். இதுதான் அந்த ஆலமரத்தின் அமைப்பு.
அன்பு வவ்வால்கள்
மக்களுக்கு என்னவோ இந்த ஆலமரத்தின் மீது அப்படி ஒரு அபரிமிதமான அன்பு. இவ்வளவு வவ்வால்கள் கூட்டம் ஒரே கிராமத்தில் ஒரே மரத்தில் இருப்பது ஆச்சரியம்தான். மக்களோடு மக்களாகவே அந்த வவ்வால்களும் அங்கு வாழ தொடங்கின. இந்த வவ்வால்கள் இருப்பதால் அந்த ஆலமரத்தின் குச்சியை விறகுக்காககூட யாரும் இதுவரை வெட்ட துணிந்ததில்லை.
மீண்டும் வந்துவிடும்
வேட்டையாட ஒரு பயலையும் ஊருக்குள் விடுவதும் இல்லை. இரை தேடி எங்க போனாலும் சரி, திரும்பவும் அதே ஆலமரத்துக்கு அதே கிளையில் ஒவ்வொன்றும் அடைக்கலமாகி விடும். எங்கே வெடி வெடித்தால் வவ்வால்கள் பயந்துவிடுமோ, நடுங்கி அஞ்சுமோ, பறந்து போய்விடுமோ என்று நினைத்த இந்த மக்கள் எப்பவுமே தீபாவளிகளில் பட்டாசே வெடிப்பது கிடையாது.
இறந்து கிடந்தன
ஆனால் இவ்வளவு சிறப்பும் வந்துட்டு போன கஜாவுக்கு தெரியுமா? ஆலமரத்தையே முறித்து போட்டான். வேரூன்றிய மரம் நாசமானது. புயலால் அந்த கிராமமும் சின்னாபின்னமானது. புயலை பார்த்து அதிர்ந்துபோன மக்கள், ஓடிப்போய் மரத்தில் வவ்வாலை பார்த்தார்கள். ஒன்றைக்கூட காணோம். கொஞ்சம் வவ்வால்கள் இறந்து கீழே விழுந்து கிடந்தன. கண்ணீர் வடித்த மக்கள் துயரப்பட்டு போனார்கள்.
அழுகிறார்கள் மக்கள்
புயல் போய் 10 நாளுக்கும் மேல ஆகிவிட்டது. திடீரென க்ரீச்.. க்ரீச்... குரல்கள்... ஆமாம்.. அதே சத்தம்தான்.. ஓடிப்போய் ஆலமரத்தை பார்த்தார்கள். பறந்து போன வவ்வால்கள் திரும்பவும் தன் இடத்தில் வந்து உட்கார்ந்திருந்துது. தாங்கள் வந்துவிட்டோம் என்பதையும் கத்தி உணர்த்தியது. ஆனால் மக்கள் இப்பவும் அழுகிறார்கள்.
சாப்பாடு இல்லை
ஒரு பக்கம் ஆனந்த கண்ணீர் என்றாலும், மறுபக்கம் வவ்வால்கள் வழக்கமாக உட்காரும் பெரிய கிளைகள் இல்லை. தொங்கி விழக்கூடிய குச்சிகளிலும், பலமில்லாத கிளைகளிலும் தானும் தொங்கி கொண்டிருந்தன. போதாக்குறைக்கு உணவாக கிராமத்தில் இருந்த பழத்தோட்டங்களும் அழிந்துவிட்டன. அவைகளுக்கு இப்போது சாப்பாடு இல்லை.
திரும்பி வந்தன
ஆனால் இந்த 10 நாளா எங்கே போச்சுங்களோ தெரியல இந்த வவ்வால்கள்.. எங்கெல்லாம் போய் என்னவெல்லாம் அவஸ்தை பட்டதுங்களோ... தெரியவில்லை. திரும்பவும் தன் மக்களிடமே, திரும்பவும் தன் மரத்துக்கே ஓடி வந்துவிட்டதை நினைத்து புயல் பாதிப்பையும் தாண்டி மகிழ்கிறார்கள் மக்கள்!!