புதுக்கோட்டை நினைத்ததை விட பெரிய இழப்பை சந்தித்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த முதல்வர் பழனிச்சாமி!
கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் நினைத்து பார்க்க முடியாத பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டை: கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் நினைத்து பார்க்க முடியாத பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
கஜா புயலால் பாதித்த பகுதிகளை தமிழக முதல்வர் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் புதுக்கோட்டையில் மாப்பிள்ளை குளம், மச்சுசாவடி உள்ளிட்ட பகுதிகளை தமிழக முதல்வர் பழனிச்சாமி ஆய்வு செய்தார். முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
விவசாயிகளிடம் பாதிப்புகள் குறித்து பேசினார்கள். முதல்வருக்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கிருந்த மக்கள், விவசாயிகள், அதிகாரிகளிடம் முதல்வர் புயல் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தார். ஆய்வை தொடர்ந்து முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பாதிப்பு கணக்கீடு
அதில், புயல் பாதிப்பு கணக்கீடு நடந்து வருகிறது. முதற்கட்ட இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லோருக்கும் இழப்பீடு கண்டிப்பாக வழங்கப்படும்.கஜா புயல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை நினைத்து பார்க்க முடியாத பாதிப்பை சந்தித்து இருக்கிறது. புதுக்கோட்டை பாதிப்புகள் அதிர்ச்சி அளிக்கிறது. 1 லட்சத்திற்கும் அதிகமான மின்கம்பங்கள் விழுந்துள்ளது.
புதுக்கோட்டை சேதம்
புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. நகரங்களில் நாளை மாலை மின்சாரம் வழங்கப்படும். கிராமங்களில் 4 நாட்களில் மின்சாரம் வழங்கப்படும். இங்கு மின்சார ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள் தொடங்கி வேறு மாநில ஊழியர்கள் வரை பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தீவிரமாக மீட்பு
அரசு தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகிறது. அனைத்து அதிகாரிகளும் களத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்கள். சிறப்பு அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
அதேசமயம் மக்களும் அதிகாரிகள், அமைச்சர்கள் பணி செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதிகாரிகளை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பது மீட்பு பணிகளை தாமதமாக்கும். அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்தது.
இயற்கை சீற்றம் என்ன செய்வது
ஆனால் இது இயற்கை சீற்றம். எதிர்பார்த்ததை விட பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பாதிப்பு மாவட்டங்களாக அறிவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்போம் என்று முதல்வர் பேட்டியளித்துள்ளார்.