பஸ்சுக்குள் 50 பேர்.. வாட்ஸ்அப் சேட்டிங் செய்தவாறே 20 கிமீ. தூரத்துக்கு ஓட்டிய மூக்கையா.. சஸ்பெண்ட்
புதுக்கோட்டை: செல்போனில் பேசிக் கொண்டே பஸ் ஓட்டுவதெல்லாம் பழசு.. இப்போ ஒருத்தர் செல்போனில் வாட்ஸ்அப் பார்த்துக் கொண்டே பஸ் ஓட்டினார்... அதுவும் அவர் ஒரு அரசு பஸ் டிரைவர்.. அப்பறம் என்ன.. சஸ்பெண்டுதான்!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் மூக்கையா. புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக உள்ளார். புதுக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் ரூட்டில் வேலை பார்க்கிறார்.
வழக்கம்போல் நேற்று பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது பஸ்சில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். மூக்கையா திடீரென தன் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பார்த்தார்.
வாட்ஸ்அப்
வண்டி ஓட்டிக் கொண்டே செல்போனை பார்க்கவும், ஏதோ அவசரமாக மெசேஜ், அல்லது போன் வந்திருக்கும் என்று பயணிகள் நினைத்தனர். ஆனால் மூக்கையா செல்போனை பாக்கெட்டில் திரும்ப வைக்கவே இல்லை, வண்டியையும் நிறுத்தவில்லை.
தவிப்பு
ஒரு கையில் செல்போன், இன்னொரு கையில் ஸ்டியரிங் என பஸ்ஸை ஓட்டினார். செல்போனில் வந்த வாட்ஸ்அப் நியூஸ்களை ஒன்றுவிடாமல் படித்து கொண்டே ஓட்டினார். இப்படியே 20 கிமீ தூரத்துக்கு ஓட்டி வந்தார். நேரம் ஆக ஆக பயணிகள் முகம் பீதியில் உறைந்தது. பஸ்ஸுக்குள்ளேயே கம்பியை பிடித்து கொண்டு தவிக்க ஆரம்பித்தனர் பயணிகள்.
வீடியோ
ஆத்திரம் அடைந்த சிலர் இதை செல்போனில் வீடியோவாகவும் பிடித்து இணையத்தில் போட்டுவிட்டனர். இதை பார்த்து பொதுமக்கள் உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகளே அரண்டு போய் போய்விட்டனர். மூக்கையா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள், புகார்கள், கண்டனங்கள் இணையத்தில் குவிய ஆரம்பித்தன.
சஸ்பெண்டு
இதைத்தொடர்ந்து மூக்கையாவை சஸ்பெண்டு செய்து புதுக்கோட்டை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் உத்தரவிட்டுள்ளார். எத்தனையோ முறை, வண்டி ஓட்டும்போது இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று எச்சரித்தும், தொடர்ந்து இதுபோன்ற செயலில் அரசு பஸ் டிரைவர்கள் ஈடுபட்டு வருவது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. இதுபோல் யார் செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறைரீதியான உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.