அன்பார்ந்த புதுக்கோட்டை வாழ் மக்களே.. ரெடியாப்பா.. 14ம் தேதி ஜல்லிக்கட்டு.. திரண்டு வாங்க!
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் அரசு அனுமதி கிடைத்துள்ளதால் தச்சங்குறிச்சியில் வருகிற 14 ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சன்குறிச்சியில் கடந்த 2ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைக்கததால் ஜல்லிக்கட்டு போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஏற்பாடுகள் தயார்
மேலும் விழா மேடை, பார்வையாளர் கேலரி, போட்டி நடத்தப்படும் திடல் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்தது. அதே நேரம் மாவட்ட நிர்வாகத்தினடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இதையொட்டி போட்டியில் கலந்துகொள்ள 850 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
போட்டி ரத்து
போட்டி ரத்தானதால் திருச்சி, தேனி, தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து காளைகளுடன் வந்த உரிமையாளர்கள் ஊர்களுக்கு அப்படியை திரும்பிச் சென்றனர். மாடுபிடி வீரர்களும் ஏமாற்றம் அடைந்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், மன வேதனையடைந்த காளை உரிமையாளர்கள் காளைகளை சாலையில் அவிழ்த்து விட்டு சிறிது தூரம் ஓட விட்டு பின்னர் பிடித்து சென்றனர்.
14 ம் தேதி ஜல்லிக்கட்டு
இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சங்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 14ம் தேதி போகி பண்டிகை அன்று தச்சங்குறிச்சியிலும், 18 ம் தேதி வடமாலாப்பூரிலும், 19 ம் தேதி கீழப்பனையூரிலும், 20 ம் தேதி விராலி மலையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது.
கிராம மக்கள் மகிழ்ச்சி
அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள தச்சங்குறிச்சி கிராம மக்கள் 14 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.