இந்த மாதிரி நடந்தால்... மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி... ப.சிதம்பரம் கணக்கு
புதுக்கோட்டை: திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம் இவ்வாறு கூறினார். மேலும், சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையோடு செயல்பட்டால், 200 இடங்களில் வெற்றிபெற்று, மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி என்றார்.
நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு வாக்களிப்பதால் சட்டமன்றத்திலும் நமக்கு வாக்களிப்பார்கள் என்று எண்ணிவிட முடியாது என்றும், சரியான வியூகங்கள் அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.
பச்சை கலர் புடவையில் ஜொலித்த ஜோதிமணி... வேடசந்தூர் உருசு விழாவில் உற்சாக பங்கேற்பு
சபதம் ஏற்று பணியாற்றுக
தமிழகத்தைப் போன்று, மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாத காரணத்தால் தான் தோல்வி அடைந்ததாக குறிப்பிட்ட அவர், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று சபதம் ஏற்று பணியாற்ற வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
உண்மையான முகம்
முன்னதாக, பாஜக அரசின் உண்மையான முகம் தெரியத் தொடங்கிவிட்டது. புதிய கல்விக் கொள்கையில் பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்தே மும்மொழித் திட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள். நாம் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்தியப் குடிமக்களாகப் பெருமையுடன் இருப்போம், இணைந்து பணியாற்றுவோம் என்று ட்விட்டரில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி அந்தஸ்து
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் முழு மனதோடு உழைக்காத மூத்த தலைவர்களை பதவியில் இருந்து நீக்கி விட்டு, அப்பதவிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 303 இடங்களைப் பெற்று தனிபெரும்பான்மையாக ஆட்சி அமைத்தது. 52 இடங்களை மட்டுமே பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
ராகுல் காந்தி முடிவு
இதனையடுத்து, கட்சித் தலைவர் பதவியே ராஜினாமா செய்ய ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்ததால், அந்த முடிவை ராகுல் காந்தி கைவிட்டதாக தகவல் வெளியானது.
வாரிசுகளுக்கு சீட்
குறிப்பாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் தங்களது மகன்களுக்கு சீட் வாங்குவதிலேயே குறியாக இருந்ததாகவும், அவர்கள் கட்சிக்காக சரியாக உழைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி ஆவேசப்பட்டதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.