கோடிகளை கொட்டிக்கொடுத்த மொய் விருந்து... முடக்கிய கொரோனா... களையிழந்த புதுக்கோட்டை மாவட்டம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மொய் விருந்துகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக இந்தாண்டு தடைப்பட்டுள்ளது.
இதனால் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, ஆலங்குடி, கொத்தமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மத்தியில் உற்சாகமில்லாத நிலையை காண முடிகிறது.
பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் மொய் விருந்துகள் நடத்தி அதில் கிடைக்கும் தொகையை கொண்டு தொழில்களில் முதலீடு செய்வது வழக்கம்.
13 ஆண்டுகளுக்கு பிறகு.. ஜூலையில் அதுவும் சென்னையில்.. வடகிழக்கு பருவமழையின் ஃபீல்.. வெதர்மேன் ஹேப்பி
ஆடி மாதம்
ஆடி மாதம் வந்துவிட்டாலே போதும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மொய் விருந்துகள் தடபுடலாக நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கில் அழைப்பிதழ்கள் அளிக்கப்பட்டு, பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு அறுசுவை அசைவ விருந்துகள் அமர்களப்படும். நூற்றுக்கணக்கான தேக்குகளில் சோறு வடித்து கிடா கறிக்குழம்பு வைத்து வந்திருக்கக் கூடிய விருந்தாளிகள் திக்குமுக்காடும் அளவுக்கு கவனிப்புகள் பலமாக இருக்கும். இவை அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடி மாதம் மட்டும் நிகழக்கூடிய ஒன்று.
விருந்துக்கு தடை
இந்நிலையில் கொரோனா தாக்கத்திற்கு மொய் விருந்துகளும் தப்ப முடியவில்லை. கடந்த கால் நூற்றாண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்தாண்டு மொய் விருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி மாதத்தில் வழக்கமாக காணப்படும் உற்சாகமும், மகிழ்ச்சியும் இந்த முறை மிஸ்ஸிங். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் மொய் செய்தவர்கள் இந்தாண்டு மொய் விருந்து நடத்தி அதன் மூலம் கணிசமான தொகையை ஈட்டலாம் என நினைத்தவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
உதவும் நோக்கில்
பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ள உறவுமுறைகளையும், நண்பர்களையும் கை தூக்கிவிடும் வகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மொய் விருந்துகள் தோன்றின. அவரவர் வசதிக்கேற்ப ஐநூறு, ஆயிரத்தில் தொடங்கி லட்சங்கள் வரை மொய் செய்வது காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. மொய் விருந்துகள் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு யாரிடமும் கடன் பெறாமல் தொழில் தொடங்கி வெற்றிக்கண்டவர்கள் ஏராளம். மொய் விருந்தை மேலோட்டமாக பார்க்கும் போது அது வேடிக்கையாகவும், விளையாட்டாகவும் தெரிந்தாலும் அதன் பயனும், நன்மையும் அதனை உணர்ந்தவர்களுக்கே தெரியும்.
வாழ்க்கையில் உயர
வாழ்க்கையில் தொழில் செய்து முன்னேற வேண்டும் என நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த மொய் விருந்துகள் பெரியளவில் கை கொடுத்து உதவுகின்றன என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. ஒரு தொழில் தொடங்குவதாக கூறி வங்கியில் கடன் கேட்டு சென்றால், பலருக்கும் அவ்வளவு எளிதாக கடன் கிடைத்துவிடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் சொற்ப தொகைதான் கிடைக்கும், அதற்கும் மாதந்தோறும் வட்டி கட்ட வேண்டியது வரும். இப்படிப்பட்ட சூழலில் மொய் விருந்துகள் பலரது வாழ்க்கைக்கும் அச்சாரமாக அமைந்து அவர்களை கரை சேர்க்கிறது.
பாதுகாப்புக்கு ஆட்கள்
மொய் விருந்து நடைபெறும் இடங்களில் பரபரப்பாக விருந்து ஒரு புறம் நடைபெற்றாலும் மொய் வசூல் செய்வதற்கென்றே பிரத்யேகமாக ஆட்கள் பணியமர்த்தப்பட்டு இருப்பார்கள். அதில் பெரும்பாலும் வெளியாட்களை தவிர்த்து விருந்து நடத்தக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் தான் இருப்பார்கள். கடந்த பல வருடங்களாக கோடிகளில் மொய் வசூல் ஆகி வருவதால் பணத்தை எண்ணுவதற்கு பணம் எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் மொய் வசூல் மையங்களில் செக்யூரிட்டி ஆட்களும் பாதுகாப்புக்கு பணியமர்த்தப்படுகிறார்கள்.
ஆயிரக்கணக்கானோர்
மொய் விருந்துகள் மூலம் சமையல்காரர்கள், பந்தல்காரர்கள், ஒலி பெருக்கி ஏற்பாட்டாளர்கள், அரிசி வியாபாரிகள், ஆட்டுக்கறி விற்பனையாளர்கள், மொய் எழுத்தர்கள், பந்தல் அலங்கார வடிவமைப்பாளர்கள், விறகு விற்பவர்கள், பிளக்ஸ் தயாரிப்பாளர்கள், என பல தரப்பட்டோரும் பயன் அடைந்து வருவாய் ஈட்டி வந்தனர். ஆனால் இந்தாண்டு இவர்கள் அனைவரது வருவாயையும் மொத்தமாக பறித்து முடக்கிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ்.