புதுக்கோட்டையில் வங்கி நகை மாயமான வழக்கில் திடீர் திருப்பம்..தேடப்பட்டவர் சடலமாக மீட்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ரூ.5 கோடி வங்கி நகைகளுடன் மாயமான பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர் ஒருவர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலகம் எதிரே அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கி இதில் கடந்த 15 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக இருந்தவர் மாரிமுத்து கடந்த 28ம் தேதி மாலை வீட்டிலிருந்து காருடன் கிளம்பி சென்றுள்ளார் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி கணேஷ் நகர் போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரையடுத்து மாரிமுத்துவை தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டனர். மாரிமுத்துவின் கார் வல்லத்திராக்கோட்டை, ஆர்.எஸ்.பதி காட்டில் கடந்த வாரம் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கர்ப்பமானதால் திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை.. காதலன் கைது
அதே நேரத்தில் மாரிமுத்து வேலை பார்த்த வங்கியில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. வங்கியில் உள்ள கணினியின் ஹார்டு டிஸ்க் எரிந்த நிலையில் மாரிமுத்துவின் காரில் இருந்து மீட்கப்பட்டது. இதனால் மாரிமுத்து தான் நகைகளை கொள்ளையடித்து சென்று இருக்க வேண்டும் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் திடீர் திருப்பமாக நகைகளுடன் மாயமான வங்கி அலுவலக உதவியாளர் மாரிமுத்துவின் உடல், மணல்மேல்குடியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டது மாரிமுத்துவின் உடல் தான் என அவரது மனைவி ராணி அடையாளம் காட்டியுள்ளார். மாயமான நகைகள் மீட்கப்படாததையடுத்து அது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.