எழுவர் விடுதலை விவகாரம்.. 'கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல'..ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த அமைச்சர்
புதுக்கோட்டை: கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல என்று கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நாங்கள் மிக நேர்மையானவர்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்.19) நூலகத் திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள்... அதிமுக உறுப்பினரை ஆஃப் செய்த அமைச்சர் ரகுபதி..!
அழுத்தம் தேவையில்லை
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.ரகுபதி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலை குறித்து ஏற்கெனவே பணியாற்றிய ஆளுநரிடம் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய ஆளுநர் ரவியிடம் அழுத்தம் கொடுக்கத் தேவையில்லை. மேலும், கடிதம் வாயிலாகக் குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு முதல்வர் வலியுறுத்தியுள்ளார்" எனச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து இருந்தார்.
ஓபிஎஸ் அறிக்கை
முன்னதாக இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ''ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரின் விடுதலையில், சட்டத்துறை அமைச்சரின் செயல்பாடானது கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் போன்று உள்ளது. எனவே, திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மத்திய அரசை வலியுறுத்தி ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சர் பதிலடி
ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் இன்று நடைபெற்ற திமுக கொடியேற்ற நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டார்.
கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல
அப்போது அவர் கூறும்போது, ''ஏழு பேர் விடுதலை விவகாரத்தை திமுக ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யாது. நீர்த்துப் போகவும் விடமாட்டோம். ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலினை விட வேறு யாரும் அதிக அக்கறை செலுத்த முடியாது. அதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கழுவுற மீனில் நழுவுற மீன் நான் அல்ல. நாங்கள் மிக நேர்மையானவர்கள்'' என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.