தண்ணி அடித்தாலும் இவர் பேசுவது அத்தனையும் உண்மை..!
ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பணியில் இல்லை என கூறப்படுகிறது.
புதுக்கோட்டை: தண்ணி அடித்தாலும் செம தெளிவா பேசுறார் மனுஷன்!!
கஜா புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புதுக்கோட்டையும் ஒன்று. கரண்ட் கம்பங்களும், பெரிய பெரிய மரங்களும் வேரோடு சாய்ந்தது. இதனால் இன்னும்கூட நிறைய இடங்களில் கரண்ட் இல்லாமல் உள்ளது.
மேலும் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நிறைய பேர் உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படித்தான் ஆலங்குடி அருகே, மரமடக்கி என்ற கிராமத்திலும் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மருத்துவமனை
ஆனால் அங்கு செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. காய்ச்சல் வந்த ஒருவர் இந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அப்போது மருத்துவமனை திறந்து கிடக்கிறது. டாக்டர், நர்ஸ் யாருமே அங்கு இல்லை.
பார்மசி இல்லை
அதனால் அவராகவே ஆஸ்பத்திரிக்குள் சென்று மாத்திரைகளை எடுத்து கொண்டு வெளியே வருகிறார். ஆனால் அவர் தண்ணி அடித்துள்ளதால், ஆஸ்பத்திரியின் அவலத்தை தள்ளாடிக் கொண்டே பேசுகிறார். அதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதில்,"ஆஸ்பத்திரிக்கு வந்தா ஒரு டாக்டர் இல்ல.. கம்பவுண்டர் இல்லை.. ஒரு ஃபார்மசி இல்லை.. நான் பிஎஸ்என்இல் வேலை பாக்கறேன். எனக்கு ஃபீவர் வந்திருக்கு.
மந்திரி கண்ட ஊரு
இதோ 4 பாரசிட்டமல் மாத்திரையை எடுத்துட்டு போறேன். தமிழ்நாடு அரசுன்னு சொல்றீங்க? கஜா புயல்ல என்னன்னவோ ஆயிடுச்சு. ஆஸ்பத்திரின்னா, ஒரே ஒரு ஆயம்மா கூட்டிட்டு இருக்கு. இங்க எத்தனை தாய்மார்கள் வந்து உட்கார்ந்து காத்துக்கிட்டிருக்காங்க. ஒரு மந்திரி கண்ட ஊரு, ஒரு எம்எல்ஏ கண்ட ஊருன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.
என்ன கிழிச்சிருக்காங்க?
ஆனா என்னத்த செஞ்சி கிழிச்சிருக்காங்கன்னு தெரியல. எனக்கு ஃபீவர் வந்ததாலே நாங்களே மாத்திரையை எடுத்துட்டு போறோம். நான் கொஞ்சம் ஃபார்மஸி படிச்சிருக்கேன். அதனால இதை கொண்டு போறேன். நான் திருடிட்டு போய்ட்டேன்னு யாராவது சொல்ல போறாங்க? இங்க யாருமே இல்லை. இப்படி ஒரு ஆஸ்பத்திரி எதுக்குங்க.. "ஆரம்ப சுகாதார நிலையம் எதற்கு?" அப்படின்னு ஒரு கேள்வியை கேக்கறேன்.
நீங்களே பாருங்க
இதுக்கு சரியான பதிலை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எல்லாரும் இந்த கிராமத்துக்கு வரணும், இந்த ஆஸ்பத்திரியை ஆய்வு பண்ணனும். இங்க பாருங்க... இதோ காய்ச்சல் அடிச்ச ஒரு குழந்தையை அம்மா கூட்டிட்டு வந்து உட்கார்ந்திருக்காங்க.. நீங்களே நேரடியாக பாருங்க" என்று சுட்டிக் காட்டுகிறார். தண்ணி அடித்தாலும் விவரமாகவே பேசும் இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.