மின்சாரம் தாக்கி மயங்கிய ஊழியர்.. முகத்தை துடைத்து பணிவிடை செய்த அமைச்சர்.. நெகிழ்ச்சி வீடியோ
Recommended Video
புதுக்கோட்டை: மின் இணைப்பு சரி செய்யும் பணியின் போது மின்சாரம் தாக்கிய ஊழியர் ஒருவரை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக சென்று காப்பாற்றிய பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.
கஜா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் வீசத் தொடங்கியது முதலே இந்த மாவட்டத்தில் முகாமிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு முடுக்கி வருகிறார் விஜயபாஸ்கர். இன்று, புதுக்கோட்டை நகரின், கீரனூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்று சில மின்சாரத்துறை ஊழியர்கள் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரு ஊழியர்கள்
அப்போது, எதிர்பாராதவிதமாக, மின் ஊழியர்களான நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தை சேர்ந்த, முருகேசன் மற்றும் தேவனாங்குறிச்சியை சேர்ந்த மோகன் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது.
மயங்கிய ஊழியர்கள்
இதனால் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார கம்பத்தின் மீது அப்படியே மயங்கி சாய்ந்தனர். சக ஊழியர்களின் உதவியுடன், கிரேன் மூலமாக, துணியை வைத்து கட்டி அந்த மின் ஊழியர்கள் கீழே இறக்கி கொண்டு வரப்பட்டனர்.
பணிவிடைகள் செய்த அமைச்சர்
அப்போது அந்த வழியாக வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதை பார்த்து பதறிவிட்டார். ஊழியரை கட்டி தூக்கி வந்த துணியை அவரே ஓடிச் சென்று அவிழ்த்தார். மேலும், ஊழியரின் கன்னத்தில் தட்டி கொடுத்தார். துணியால் அந்த ஊழியரின் முகத்தை துடைத்தார். இவ்வாறு அமைச்சர் என்றும் பாராமல், எளிமையாக அவரே நேரடியாக அந்த ஊழியருக்கு பணிவிடைகள் செய்து, பிறகு தனது கார் மூலமாக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன்பிறகு, மருத்துவமனைக்கு சென்று ஊழியர் நலமாக இருக்கிறாரா என்பதை அவரே நேரில் பார்த்ததோடு, மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சருக்கு பாராட்டு
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் இந்த மனிதாபிமான உதவியை மின்வாரிய ஊழியர்களும், அங்குள்ள பொதுமக்களும் பாராட்டினர். பாதிக்கப்பட்ட ஊழியர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்தினர். இந்த சம்பவம் அப்போது வீடியோவாகவும் சிலரால் எடுக்கப்பட்டது.