எம்எல்ஏவுக்கும் மாணவர்களுக்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி வைத்த அமைச்சர் விஜய பாஸ்கர்!
புதுக்கோட்டை: மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே விசில் அடிக்கும் போட்டி நடக்க உள்ளது என்று விசில் அடிக்கும் போட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் வைத்தார். இதனால் அவரது நிகழ்ச்சியில் விசில் சத்தம் காதை பிளந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
வேளாண் மண்டலம்
" காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது இதுகுறித்து யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் எந்த ஆட்சியில் இருப்பவர்களும் எந்த அரசியல் கட்சித் தலைவர்களும் செய்ய முடியாத துணிச்சலான முடிவாக காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர்
குண்டாறு இணைப்பு
காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தில் ஒரு சில பகுதிகளுக்கு வராது என்று ஒரு சிலர் கூறுகின்றனர் ஆனால் திட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் காவிரி நீர் பாயும். மெயின் வாய்க்கால்கள் வழியாக கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டு அதன் மூலமாக ஒவ்வொரு குளமாக நிரம்பும் படி இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
குறுக்கீடு
அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது பள்ளி மாணவ மாணவிகள் தொடர்ந்து விசில் அடித்துக் கொண்டே இருந்தனர். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் மாணவர்களுக்கும் கந்தர்வகோட்டை எம்எல்ஏ ஆறுமுகத்திற்கும் இடையே ஒரு போட்டி ஒன்று நடக்க உள்ளது
விசில் அடித்த எம்எல்ஏ
அதில் யார் சத்தமாக விசில் அடிக்கிறார்கள் என்பது தான் இந்த போட்டி என்றார். இதன் பின்னர் எம்எல்ஏ ஆறுமுகம் பலத்த கரகோஷத்துடன் விசிலடித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். இதனை தொடர்ந்து மாணவர்களும் உற்சாகமாய் விசில் அடித்தனர். இந்த சம்பவம் அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.