''ஓரம்போ...ஓரம்போ..ருக்குமணி வண்டி வருது''...பயணிகளுடன் 5 கி.மீ. ஆட்டோ ஒட்டிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டிச்சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இலுப்பூரில் இருந்து பெரியகுரும்பம்பட்டி வரை சுமார் 5 கி.மீ. தூரம் பயணிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆட்டோ ஓட்டினார.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை கவர்வதற்காகவே விஜயபாஸ்கர் விளம்பரம் செய்துள்ளார் என ஒருசிலர் கூறியுள்ளனர்.
பொங்கல் விழா
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்றார். அங்குள்ள கிராம மக்களோடு, பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடினார்.
விஜயபாஸ்கர் பாஸ்கர்
பின்னர் சொந்த ஊரான இலுப்பூரில் இருந்து தென்னலூர் கிராமத்திற்கு பொங்கல் விழாவிற்காக தனது காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது இலுப்பூர் சாலையில் ஒரு ஆட்டோவில் மாணவிகள், சிறுவர்கள் மற்றும் பெண்கள் பெரியகுரும்பம்பட்டிக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தனர்.
ஆட்டோ ஓட்டினார்
இதனை கவனித்த அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த ஆட்டோவை தானே ஓட்டிச் சென்று உங்களை சொந்த ஊரில் இறக்கி விடுவதாக அவர்களிடம் கூறினார். தொடர்ந்து அமைச்சர் அந்த ஆட்டோவில் ஏறினார். இதனால் ஆச்சரியமும், உற்சாகமுகம் அடைந்த பெண்கள், சிறுவர்கள், மாணவிகள் மகிழ்ச்சியோடு ஆட்டோவில் பயணிக்கத் தொடங்கினர்.
இது தேர்தல் விளம்பரம்
இலுப்பூரில் இருந்து சுமார் 5 கி.மீ தூரம் உள்ள பெரியகுரும்பம்பட்டி வரையில் ஆட்டோவை அமைச்சர் விஜயபாஸ்கர் ஓட்டிச் சென்றார். அதன்பின் அங்கு சிறுவர்கள் பெண்கள் மற்றும் மாணவிகளை இறக்கிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அமைச்சர் ஆட்டோ ஒட்டி செல்வது கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். ஆட்டோ ஒட்டி செல்லும் வீடியோவை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள ஒரு தரப்பினர் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மக்களை கவர்வதற்காகவே விஜயபாஸ்கர் விளம்பரம் செய்துள்ளார் என கூறியுள்ளனர்.