ஆசை, தோசை, அசத்திய அமைச்சர்.. புயல் பாதித்த மக்களை குஷிப்படுத்திய விஜயபாஸ்கர்
உயிரை துச்சமென நினைத்து பணியாற்றிய மின்வாரிய ஊழியர்களுக்கு சப்பாத்தி தயாரித்து கொடுத்த அமைச்சர்
புதுக்கோட்டை: தங்களது உயிரை துச்சமாக கருதி புயல் பாதித்த பகுதிகளில் இரவு பகல் பாராமல் மின்கம்பிகளை சரி செய்த மின் வாரிய ஊழியர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சப்பாத்திகளை தன் கைகளால் தயாரித்து கொடுத்தார். அது போல் ஆதிதிராவிடர் காலனியில் தோசை சுட்டும் அசத்தினார்.
கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்களில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. எப்போது புயல், மழை, வெள்ளம் என வந்தால் மின்துறை ஊழியர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், பொதுப் பணித்துறையினர் , மருத்துவர்கள், செவிலியர்கள் என மாய்ந்து மாய்ந்து பணியாற்றுவது வாடிக்கையான ஒன்று.
அதிலும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. மழை நின்று, வெள்ளம் வடிந்தவுடன் மின் சீரமைப்பு பணிகளை செய்ய மற்ற மாவட்டங்களில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
ஆரம்பித்த சம்பவங்கள்
இவர்கள் இரவு, பகல் பாராமல் சிறிதும் ஓய்வின்றி உழைத்து வந்தனர். கம்பத்தில் உட்கார்ந்து ஒரு ஊழியர் சாப்பிட்ட படம் மிகவும் வைரலானது. அதுபோல் மற்ற மாவட்டங்களில் இருந்து செல்லும் ஊழியர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து மறுநாள் விடியற்காலையிலேயே தங்கள் பணியை ஆரம்பித்த சம்பவங்களும் நடந்துள்ளன.
மின் விநியோகம்
இதுபோல் கீரனூர் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளின் போது மின்சாரம் பாய்ந்து இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். மின் வாரிய ஊழியர்களின் ஒரே கோரிக்கை மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின் விநியோகம் செய்யும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
உணவு தயாரிப்பது
புதுக்கோட்டை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஊழியர்கள் மாத்தூர் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கேயே உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
சப்பாத்தி தயாரித்த அமைச்சர்
இந்தநிலையில் நேற்று இரவு திருச்சியில் இருந்து புதுக்கோட்டை சென்ற அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மாத்தூரில் மின்வாரிய ஊழியர்கள் தங்கியுள்ள பள்ளிக்கு சென்றார். அவர்களது பணியை பாராட்டிய பின்னர் இரவு உணவாக அவர்களுக்கு சப்பாத்தி தயாரித்து, தானே சுட்டு பரிமாறினார். பின்னர் அவர்களுடன் அமர்ந்து தானும் சாப்பிட்டார்.
தோசை சுட்ட அமைச்சர்
அதுபோல் விராலிமலை தொகுதி குன்னத்தூர் ஊராட்சியில் பிடராம்பட்டியில் ஆதிதிராவிடர் காலனியில் ஒரு வீட்டில் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்று தோசை செய்து கொடுத்தார். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.