கரண்ட் வந்த பிறகுதான் சென்னைக்கு போவேன்.. விஜயபாஸ்கர் உறுதி
கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்தால்தான் சென்னை போவேன் என விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை: கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்த பிறகுதான் சென்னைக்கு போவேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் விழா புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு, நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அரசின் கடமை
புதுக்கோட்டைமாவட்டம் இவ்வளவு சீக்கிரம் மீண்டதற்கு காரணம், அரசு மற்றும் அரசுடன் இணைந்து பொதுமக்கள் தன்னார்வலர்கள் ஆகியோர் பணியாற்றியது. முதலில் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை சொன்னால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். அதுதான் ஒரு அரசின் கடமை.
தெளிவுபடுத்த வேண்டும்
இல்லையென்றால், சொந்த முயற்சியிலாவது அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் அதை மக்களுக்கு சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டும்.
5 சதவீதம் பாக்கி
இப்படித்தான் நான் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகளை செய்து வருகிறேன். அதனால்தான் என் காரை யாருமே மறிக்கவில்லை. மாவட்டத்தில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு உள்ளது. இன்னும் 5 சதவீதம்தான் பாக்கி. அதுவும் இன்னும் 2, 3 நாளில் முடிந்துவிடும்.
சென்னை செல்வேன்
பிறகு எல்லா கிராமங்களுக்கும் சீக்கிரமாக மின்இணைப்பு வந்துவிடும். அப்படி கிராமங்களுக்கு முழுவதும் மின் இணைப்பு தரப்பட்டுவிட்டது என்பது உறுதி செய்தபிறகுதான் நான் சென்னைக்கு போவேன்." என்றார்.