பொன்னமராவதி கலவரம்... ஆடியோவை வெளியிட்ட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது
புதுக்கோட்டை: பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஒரு சமூகத்தினரை பற்றி தவறாக சித்தரித்தும், அந்த சமூக பெண்கள் பற்றி தரக்குறைவாக பேசியும் வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ வைரலானது. இதனால், குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
அவதூறு பரப்பியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், 5 போலீசார் காயமடைந்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டதால் தடியடி சம்பவம் நடைபெற்றது. கலவரம் தொடர்பாக, 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை
மேலும், புதுக்கோட்டையின் பல்வேறு கிராமங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கலவரம் பரவியதால், போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் புகைப்படத்தை பரப்பிய தஞ்சை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை கைது செய்தனர். அவரை பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், கீரனூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரையும் தேடி வருகின்றனர்.
இந்தநிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான ஆடியோவை வெளியிட்டதாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.