திமுக வெற்றியை அதிமுகவுக்கு தாரைவார்ப்பு... புதுக்கோட்டையில் போஸ்டர் சர்ச்சை
புதுக்கோட்டை: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திமுக பெற்ற வெற்றியை மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திருமயம் ஒன்றிய கழகத்தொண்டர்கள் என்ற பெயரில் ரகுபதியை விமர்சித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் தலைமை வரை பஞ்சாயத்திற்கு சென்றுள்ளது.
மேலும், திருமயம் ஒன்றிய திமுக செயலாளர் அழகு சிதம்பரம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அந்த போஸ்டரில் புகார் கூறப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர்.தாத்தா... ஜெயலலிதா பாட்டி... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிரிப்பு பேச்சு
ஊரக உள்ளாட்சி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவை விட கூடுதல் இடங்களை திமுக கைப்பற்றியும், மறைமுகத் தேர்தலின் போது பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு காரணம் புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ரகுபதி தான் என புகார் கூறுகின்றனர் ஒரு தரப்பினர்.
விமர்சனம்
அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர் ரகுபதி என்பதால் அவருக்கு இன்னும் தனது பழைய கட்சி மீதான பாசம் போகவில்லை என்றும், இதன் காரணமாகவே அதிமுகவுக்கு சாதகமான முறையில் அவர் செயல்படுகிறார் எனவும் விமர்சிக்கின்றனர் திருமயம் ஒன்றியத்தை சேர்ந்த சில நிர்வாகிகள்.
தாரைவார்ப்பு
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் திமுகவின் வெற்றியை அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டதாக ரகுபதி எம்.எல்.ஏ.மீது புகார் கூறி ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மாவட்ட கவுன்சிலர்கள் 3 பேரை அதிமுகவுக்கு தாரைவார்த்துவிட்டார் ரகுபதி என கூறப்பட்டுள்ளது.
எதிர்ப்பு
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சீட் எதிர்பார்த்து கிடைக்காத காரணத்தால் ஒரு சிலர் இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், இந்த போஸ்டருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற விவரம் தங்களுக்கு தெரியும் எனவும் கூறுகின்றனர் ரகுபதி தரப்பினர்.