அண்ணே அந்த பக்கம் போகாதீங்க.. துரத்தி துரத்தி காதை கடித்த அண்ணன்-தம்பி! பதறியடித்து ஓடிய மக்கள்!
புதுக்கோட்டை: சினிமாக்காட்சியில் வரும் சம்பவம்போல் புதுக்கோட்டை பொன்னமராவதியில் அரங்கேறியுள்ளது ஒரு சம்பவம். மனநலம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அண்ணன் தம்பி இருவர் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்து குதறியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திரா நகரை சேர்ந்த சகோதரர்கள் அய்யாசாமி(27) மற்றும் ஆறுமுகம்(25). இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மனநலம் பாதிப்புக்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் பொன்னமராவதி பெரியார் நகரில் லட்சுமணன் என்பவர் நடத்திவரும் நகை அடகு கடையில் இவர்கள் 5000 ரூபாய்க்கு அடகு வைத்த 4 கிராம் நகையை மீட்பதற்காக இன்று இரவு சென்றுள்ளனர்.

அண்ணன் - தம்பி
அப்போது லட்சுமணன் இருவரிடத்திலும் இரவு ஆகிவிட்டதால் நகையை நாளைக்கு மீட்க வாருங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவரும் நகையை உடனடியாக மீட்க வேண்டும் என்று கூறி லட்சுமணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென லட்சுமணனை இருவரும் சேர்ந்து கடித்துள்ளனர். இதில் லட்சுமணன் சிறு காயமடைந்த நிலையில் அருகே இருந்தவர்கள் சகோதரர்கள் இருவரையும் தடுக்க சென்றுள்ளனர்.

காதில் கடி
இந்நிலையில் அவர்களையும் சரமாரியாக இருவரும் சேர்ந்து காது,விரல், முதுகு உள்ளிட்ட இடங்களில் கடித்ததால் ஆறு பேர் லேசான காயமும் நான்கு பேர் படுகாயமும் அடைந்தனர். இதனை அடுத்து அருகே இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சகோதரர்கள் அய்யாசாமி மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரையும் பிடித்து வைத்திருந்தனர்.

10 பேர் காயம்
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொன்னமராவதி காவல்துறையினர் மனநலம் பாதிக்கப்பட்ட இருவரையும் பொன்னமராவதி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பின்னர் அவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் கடித்து படுகாயமடைந்த சாகுல் ஹமீது ராஜேந்திரன் சரவணன் இளவரசன் ஆகிய நான்கு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.

பரபரப்பு
மேலும் இது குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சகோதரர்கள் இருவர் நகை அடகு கடை உரிமையாளர் உள்ளிட்ட ஏழு பேரை சரமாரியாக கடித்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துரத்தி துரத்தி அவர்கள் கடித்து வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.