புஷ்பத்தின் மூச்சுக் குழாய்க்குள் சிக்கிய திருகாணி.. சாதுரியமாக அகற்றிய அரசு மருத்துவர்கள்!
புதுக்கோட்டை: மூச்சுக் குழாய்க்குள் சென்ற மூக்குத்தியின் திருகாணியை ஆபரேஷன் பண்ணாமல், அகநோக்கி மூலம் அகற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பட்டம்மாள் விடுதியை சேர்ந்த 55 வயது பெண்மணி புஷ்பம். கடந்த ஒரு மாத காலமாக அவருக்கு வறட்டு இருமல் இருந்து வந்துள்ளதால், புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
ஆனால் இருமல் சரியாகவில்லை. மாறாக இருமல் வரும்போது சளியில் ரத்தம் வரத் தொடங்கியதால், புஷ்பம் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை சிடி ஸ்கேன் கொண்டு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், அவரது மூச்சுக்குழாயில் மூக்குத்தியில் உள்ள திருகாணி அடைத்து கொண்டிருப்பதும், அடைப்பிற்கு பின்னால் உள்ள நுரையீரல் பகுதி வேலை செய்யாமல் சுருங்கி இருப்பதையும் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அந்த மூக்குத்தி திருகாணியை எடுப்பதற்காக மூச்சுக்குழாயில் அகநோக்கி இணை செலுத்தி மருத்துவர்கள் ஆராய்ந்தனர். அப்பொழுது திருகாணி தலைப்பகுதி கீழேயும் நுனிப்பகுதி மேலும் இருப்பதை கண்டறிந்து, அகநோக்கி மூலமே அகற்றிவிட தீர்மானித்தனர்.
அதன்படி அகநோக்கி வழியே ஒரு சிறிய இடுக்கி போன்ற கருவி செலுத்தப்பட்டு, அந்த அணியின் நுனிப்பகுதியை பிடித்து அதை அப்படியே வெளியே எடுத்தனர். அதன்பின் நோயாளி புஷ்பம் தற்போது நலமாக உள்ளார்.
அடிச்சது யோகம்.. குலுக்கலில் தலைவரானார் மாயாகுளம் சரஸ்வதி!
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பெண்மணியின் மூச்சுக்குழாய்க்குள் சென்ற மூக்குத்தியின் திருகாணியை சாதுரியமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்திருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.