மாயமான சரண்யா... நடத்தையில் சந்தேகப்பட்டு கணவன் செய்த கொடூரம்.. 3 வருஷத்துக்கு பின் அம்பலம்!
Recommended Video
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கடந்த 2017 ஆம் ஆண்டு மனைவியை கொலை செய்துவிட்டு காணவில்லை என்று நாடகமாடிய கணவனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
கணவன் அளித்த தகவலின் பேரில் பாழடைந்த கிணற்றில் புதைக்கப்பட்டிருந்த மனைவியின் சடலத்தை சிபிசிஐடி போலீசார் மூன்றாண்டுக்கு பின் தோண்டி எடுத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்ற ரமேஷ் என்பவருக்கும் ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005 ம் ஆண்டு திருமணமாகியது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சரண்யாவின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க நீதிமன்றம் 2018 ம் ஆண்டு உத்தரவிட்டது.
திருச்சியில் மனைவி, 2 மகன்களை கொலை செய்துவிட்டு நகை கடைக்காரர் தற்கொலை முயற்சி.. சிக்கியது கடிதம்!
கணவர் மீது சந்தேகம்
இதனையடுத்து சரண்யா காணாமல் போன வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் அவரது கணவர் ராஜா என்ற ரமேஷை அழைத்துச் சென்று விசாரணையை துரிதப்படுத்தினர்.
நண்பர்களுக்கு பணம்
விசாரணையில் மனைவி சரண்யாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது நண்பர்கள் ரகு, பாட்ஷா உள்ளிட்ட நான்கு பேரிடம் ரூபாய் ஒரு லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்யுமாறு கூறியதாகவும், அவர்கள் ஒன்று சேர்ந்து தனது மனைவியை கொலை செய்துவிட்டு சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டதாகவும் அவரது கணவர் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.
அடையாளம் காட்டினார்
இதனையடுத்து கணவர் ராஜாவை சம்பவ இடத்துக்கு இன்று அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார் சரண்யாவை வீசி சென்ற கிணற்றை அடையாளம் கண்டு ஜேசிபி எந்திரத்தின் உதவியைக் கொண்டு தோண்டினர். சுமார் 3 மணி நேர முயற்சிக்கு பின் அவரது சடலம் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டது.
மூன்று பேர் கைது
இதனையடுத்து அதனை உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக எடுத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய கணவர் ராஜா என்ற ரமேஷ் மற்றும் பாட்ஷா, ரகு உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையால் பரபரப்பு
நடத்தையில் சந்தேகம் அடைந்து 12 ஆண்டுகள் கூட வாழ்ந்த மனைவியை கணவர் ஒருவர் நண்பர்களுக்கு பணம் கொடுத்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.