திமுக நம்மை மதிப்பதில்லை... புதுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகிகள் ஆவேசம்... சஞ்சய் தத் திகைப்பு..!
புதுக்கோட்டை: திமுக நம்மை மதிப்பதில்லை எனக் கூறி கூட்டணிக்கு குண்டு வைத்துள்ளனர் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர்.
Recommended Video
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத் தலைமையில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர் திமுகவினர் நம்மை மதிப்பதேயில்லை எனக் கூறி குண்டை வீசினர்.
இதனால் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் சஞ்சய் தத் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். 10-க்கும் மேற்பட்டோர் திடீரென மேடையை முற்றுகையிட்டு இரண்டு கைகளையும் ஆவேசமாக உயர்த்தி திமுக கூட்டணிக்கு எதிர்ப்புக் காட்டினர்.
அவர்களை சமாதானம் செய்து இருக்கைக்கு போகுமாறும் மற்ற விவகாரங்களை பிறகு பேசிக்கொள்ளலாம் எனவும் கூறி மாவட்ட நிர்வாகிகள் அனுப்ப முயன்றனர். ஆனாலும், அவர்கள் அதைக் கேட்பதாக தெரியவில்லை. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த சஞ்சய் தத் அழுவதா சிரிப்பதா எனத் தெரியாமல் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டத்தில் வழக்கமாக கோஷ்டி யுத்தம் தான் நடைபெறும். ஆனால் இந்த முறை, ஒரு படி மேலே சென்று கூட்டணி யுத்தம் நடைபெற்றிருக்கிறது. இதனிடையே திமுகவுக்கு எதிராக கூச்சல் எழுப்பியவர்கள் பின்னணியில் அதிமுகவினர் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ் நடத்தும் டிராக்டர் பேரணி... 234 தொகுதிகளிலும் எங்க கூட்டணி ஜெயிக்கும் - சஞ்சய்தத்
ஏற்கனவே காங்கிரஸ் கழன்றுகொண்டால் சரி என இருக்கும் திமுகவுக்கு இந்த நிகழ்வு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே திமுக கூட்டணி குறித்து கூச்சல் எழுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி மாநில தலைமை ஆராய்ந்து வருகிறது.