புதுக்கோட்டை சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை.. கயவனுக்கு மூன்று மரண தண்டனை.. பரபர தீர்ப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்த ராஜா என்ற கொடூரனுக்கு மூன்று மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளீர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினரின் 7 வயது சிறுமி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடந்த ஜூன் மாதம் காணாமல் போனார். அருகில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருப்பார் என பெற்றோர்கள் நினைத்த நிலையில், இரவு நேரமாகியும் சிறுமி வீட்டிற்கு வரவில்லை.
இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் சிறுமியைத் தேடினர். சிறுமி கிடைக்காத நிலையில் காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், மோப்ப நாயின் உதவியுடன் நேற்று சிறுமியின் உடலை கண்டறிந்தனர். கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது .
பாலியல் வன்கொடுமை
தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர் சிறுமிக்கு நீதி கேட்டு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஏம்பல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜாவை கைது செய்து விசாரணை செய்தபோது, அவர் சிறுமியை
பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
ஆஸ்பத்திரியில் ஓட்டம்
இந்த நிலையில் ராஜாவை மருத்துவ பரிசோதனைக்காக போலீசார் சிறையில் இருந்து அழைத்து வந்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது போலீசார் பிடியிலிருந்து ராஜா தப்பி ஓடினார். 8 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான போலீசார் அவரை மீண்டும் கைது செய்தனர்.
தூக்கு தண்டனை
இந்த நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரணை செய்த மகிலா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ராஜாவிற்கு சிறுமியை கொலை செய்த குற்றத்திற்கு, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு தனித்தனியே இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் மற்றொரு பிரிவிற்கு மேலும் ஒரு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 12 வருட கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன்10000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.