33.3 அடி உயரத்தில் ‘பல்’.. கின்னஸ் சாதனை படைத்த புதுக்கோட்டை மருத்துவர்!
புதுக்கோட்டை மருத்துவர் உலகிலேயே உயரமான செயற்கைப் பல் செய்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் 35 அடிக்கு செயற்கைப் பல் மாதிரியை உருவாக்கி ராஜேஷ் என்ற மருத்துவர் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன். இவர் பல் பராமரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சுமார் 33.3 அடி உயரமுள்ள மிகப்பெரிய பல் மாதிரி ஒன்றை வடிவமைத்துள்ளார். இது புதுக்கோட்டை நகர் மன்றத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
உலகத்திலேயே இவ்வளவு பெரிய பல் மாதிரி செய்யப்பட்டுள்ளது இது தான் முதன்முறை என்பதால், இது கின்னஸ் சாதனையாகக் கருதப்படுகிறது. இது தொடர்பாக லண்டனைச் சேர்ந்த சுவப்னில் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு புதுக்கோட்டை வந்து இந்த பல் மாதிரியை ஆய்வு செய்தனர்.
அதன் முடிவில் இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கான சான்றிதழும் ராஜேஷ் கண்ணனுக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னர், கடந்த 2015ம் ஆண்டு நியூசிலாந்தில் கார்ப்ரேட் நிறுவனத்தின் சார்பில், 30 அடி உயரத்தில் மாதிரி பல் அமைக்கப்பட்டு இருந்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை ராஜேஷ் கண்ணன் முறியடித்துள்ளார்.
இந்த செயற்கைப் பல்லானது பிளாஸ்டர் ஆப் பேரீஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க சுமார் 40 நாட்கள் ஆனதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த சாதனை முயற்சிக்கு ராஜேஷுடன் சேர்ந்து 10 பேர் குழுவாக உழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.