18 வயதில் 62 முறை டயாலிசிஸ்.. கொரோனா பாதிப்பு வேறு.. இளைஞரை வெற்றிகரமாக காப்பாற்றிய அரசு மருத்துவமனை
புதுக்கோட்டை: தனியார் மருத்துவமனையில் 62 முறை டயாலிசிஸ் செய்து வந்த 18 வயது இளைஞருக்கு கொரோனா பாதிப்பும் வந்ததால் அந்த மருத்துவமனை அவரை கைவிட புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையோ அவரை "சேர்த்துபிடித்து" இன்று அவரிடம் இருந்த கொரோனாவையும் விரட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவருடைய மகன் மகேஷ் வில்லியம்ஸ். 24 வயதான இளைஞரான இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்த காரணத்தினால் இதுவரை 62 முறை டயாலிசிஸ் செய்து கொண்டார்.
உலகில் கொரோனாவால் எந்தெந்த நாடுகளில் உயிரிழப்பு.. பாதிப்பு மிக அதிகம்.. அமெரிக்காவில் புதிய உச்சம்
ஏழ்மை நிலை
மகேஷ் வில்லியம்ஸின் தந்தை ஏழ்மையான விவசாய பணி செய்து வருபவர். டயாலிசிஸ் செய்ய பணம் இல்லாத காரணத்தினால் ஊர் மக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பணம் பெற்று இதுநாள் வரை வைத்தியம் செய்ய சுமார் ஐந்து லட்சம் வரை செலவு செய்துள்ளார்.
கொரோனா
இந்நிலையில் மகேஷ் வில்லியம்ஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தனியார் நிர்வாகம் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களுக்கு தங்களுடைய மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்ய முடியாது என்றும் எனவே தாங்கள் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
தனியார் மருத்துவமனை
பல லட்சம் ரூபாய் செலவு செய்து நோயும் நீங்காத நிலையில் கைவிரித்த தனியார் மருத்துவமனையை என்ன சொல்வது என தெரியாமல் தவித்த மகேஷ் வில்லியம்ஸ் குடும்பத்தினர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வில்லியம்சை சேர்த்தனர். இதுவரை அனைத்து மருத்துவ செலவுகளையும் சேர்த்து சுமார் 7 லட்சம் வரை செலவு செய்து மன உளைச்சலில் காணப்பட்டார் மகேஷ் வில்லியம்ஸ்.
டயாலிசிஸ்
புதுக்கோட்டை அரசு ராணியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிறகு மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் கொடுத்த உத்வேகத்தின் காரணமாக மிகுந்த மகிழ்ச்சியான நபராக மாறினார் வில்லியம்ஸ். இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்று நபரான மகேஷ் வில்லியம்ஸுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கும் பொருட்டு அரசு ராணியார் மருத்துவமனைக்கு சிறப்பு டயாலிசிஸ் கருவி கொண்டு வரப்பட்டது.
கொரோனா வைரஸ்
இதையடுத்து மகேஷ் வில்லியம்ஸ்க்கு தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸுக்கான சிறப்பு மருத்துவத்தையும் மருத்துவர்கள் கவனித்து வந்தனர். கடந்த 13 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மகேஷ் வில்லியம்ஸ் தற்போது தொற்று இல்லாத இளைஞராக மாறியுள்ளார். மிகுந்த சவாலான இந்த சூழ்நிலையில் வாலிபரின் உயிரை காப்பாற்ற புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் புதிய டயாலிசிஸ் மிஷினை வரவழைத்து அதன் மூலம் இளைஞரின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.
சிறப்பு
இதுபற்றி மகேஷ் வில்லியம்ஸ் கூறும்போது பொதுவாக அரசு மருத்துவக்கல்லூரி இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதை நான் முதலில் நினைக்கவில்லை. நோய் தொற்று ஏற்பட்டு புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு வரும் பொழுது நான் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கு வந்த உணர்வே ஏற்பட்டது. மருத்துவர்கள் செவிலியர்கள் எனக்கு ஆறுதலாக இருந்தனர்.
கொரோனா வைரஸ்
அவர்களுடைய முயற்சியால் இன்று நான் கொரோனா வைரஸ் இல்லாத நபராக மாறி இருக்கிறேன். மேலும் உயிரின் எல்லைக்குச் சென்ற எனக்கு மீண்டும் உயிரை மீட்டு கொடுத்த தமிழக அரசுக்கும் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கும் தன்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முதியவர்கள், மூதாட்டிகள்
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் Corona வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மையமாக துவக்கப்பட்ட காலத்தில் இருந்து இதுவரை எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம். பிறந்து ஒன்றரை ஆண்டு ஆன பச்சிளங் குழந்தைக்கும் 95 வயது முதியவர், 92 வயது மூதாட்டி, 80 வயது முதியவர் என எண்ணற்ற உயிர்களை மருத்துவமனை காப்பாற்றி உள்ளது.
மருத்துவக் கல்வி
தொற்று ஏற்பட்ட நபர்களின் மன உளைச்சலை போக்கும் வகையில் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு செவிலியர் மூலமாக சிறந்த சேவையை வழங்கி வருவதால் இது சாத்தியமானது. வருங்காலத்தில் எத்தகைய சிக்கலில் உள்ளவர்களுக்கு Corona தொற்று ஏற்பட்டாலும் அதை சரி செய்து அவருடைய வாழ்வை மீட்டு கொடுப்பதில் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்வியில் மருத்துவர்கள் முனைப்புடன் இருப்பதாக தெரிவித்தார்.